Skip to main content

நந்தவனம்


நோயுற்றவனை
நந்தவனத்தை நோக்கும்படி
படுக்கவைக்காதிருப்பது நல்லது
புலரியின் இளங்கதிர்கள்
அவன் கண்களில் எரியும்.
வீசு தென்றலுக்கும், வீங்கிள வேனிலுக்கும்
அவன் தலை வெடித்துவிடும்.
சடசடக்கும் மழை நடனம்
அவன் ஊனத்தைப் பெருச் செய்யும்.
கீச்சொலியின் கூரலகு
அவன் நெஞ்சத்தில் துளையிடும்.
விளக்கை அணைத்து விட வேண்டும்
கதவை நன்றாகத் தாளிட வேண்டும்.
கம்பிகளுக்கிடையே நாக்கை நீட்டி
இந்த வாழ்வை நக்கிவிடாத படிக்கு
சாளரத்தை அடித்துச் சாத்தி விட வேண்டும்.

நோயுற்றவனை
நந்தவனத்தை நோக்கும்படி
படுக்கவைப்பது நல்லது.
புலரியின் இளங்கதிர்கள்
அவனை
மடியில் ஏந்தித் தலைநீவும்.
தென்றலும், வேனிலும்
அறையை வெளியாக்கும்.
கொட்டுமழை
அவனது
நனையாத இடத்தையெல்லாம் நனைத்துவிடும்.
கீச்சொலிகள்
இந்த வாழ்வு ஒரு பாடல் என்று
அவனுக்கு உறுதி சொல்லும்.
மைனாவைக் கண்டு கண்டு
மைனாபோலாகி
மைனாவாகி விடலாம்.
நோயின் வாயிலிருந்து
ஒரு மைனா பறந்து செல்வதை
நாம் கண் ஆரக் காணலாம்.

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...