ஒருவன் வழக்கமான தன்னை உடைத்து குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டு பேரணியில் கலக்கிறான். இவன் இன்னொருவன் மகத்தானவன். தனி ஆட்கள் சேர்ந்து சேர்ந்து உருவாகிறது ஓர் அணி. அணிகள் கூடிக்கூடி அலையடிக்கிறது பேரணி. நெருப்பினால் இழுத்துக்கட்டப்பட்ட பேரணிகள் பிரம்மாண்ட பேரணிகளாகி சடசடக்கின்றன. தொண்டையிலிருந்து எழும் முழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி இதயத்தை அடைகின்றன. நெஞ்சமே குரலாகி கூவி இடிக்கையில் ஒவ்வொருவரும் தனித்தனி பிரம்மாண்டம். (தோழர் சுகுமாரனுக்கு) |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments