அவளுக்கு மொத்தம் மூன்று வாய்கள் அணிலோடித் திரியும் முற்றத்தில் நின்றுகொண்டு வேடிக்கை காட்டியபடியே பிள்ளைகளுக்கு உணவூட்டுவாள் சேலைத் தலைப்பை பிடித்தபடி கால்களையே சுற்றிச் சுற்றிக் குழையும் ஒன்று. இன்னொன்று இடுப்பில் அமர்ந்திருக்கும். இருவருக்கும் மாறி மாறி ஊட்டுவாள் யாரோ ஒருவர் முரண்டுபிடித்து சிணுங்குகையில் "அணிலுக்கு ஊட்டி விடுவேன்" என்று மிரட்டுவாள். நாளடைவில் ஓட்டங்களிலிருந்து ஆசுவாசத்திற்குத் திரும்பியது அணில். மெல்ல மெல்ல அச்சத்திலிருந்தும் சந்தேகத்திலிருந்தும் கீழிறங்கி வந்தது அது. மெல்ல மெல்ல மேலெழும்பி வந்தாள் அன்னை. இன்று கொஞ்சம் அமுதெடுத்து அணிலுக்கு ஊட்டினாள் பேரன்னை. அப்போது அவளுக்கு அளவிறந்த வாய்கள். நன்றி: ஏழிலைப்பாலை PC Sandhya Pallissery |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments