Skip to main content

புதிய உலகின் விசித்திரங்கள்


என் வாழ்வில் நான் கண்ட பெரும் தொற்று நோய் இந்த கொரோனோ தான். "பிளேக்"  பற்றி பாட்டி சொல்லிய கதைகள் உண்டு. எங்கள் ஊரின் கோடியில் " பிளேக் மாரியம்மன் " என்று ஒரு அம்மன் உண்டு. அவள் அந்த நோயிலிருந்து மக்களைக் காத்தவளாக இன்றும் வணங்கப்படுகிறாள்.  எய்ட்ஸ் வந்த போது நிலவிய அச்சம் ஒரு கட்டுக்குள் இருந்தது. அதன் காரணங்கள், பரவும்விதம் போன்றவை மருத்துவ வல்லுநர்களால் தெளிவாக முன் வைக்கப்பட்டன. அது கொரோனோவைப் போல மொத்த ஜனத்திரளையும் அச்சுறுத்தவில்லை. ஆனால் கொரோனோ நோய் குறித்த குழப்பங்கள் இன்றளவும் தீர்ந்தபாடில்லை. 

   ஒரே அறையில்  10 நாட்களுக்கும் மேலாக ஒன்றாகத் தங்கியிருந்து,  குலாவி மகிழ்ந்த இருவருள் ஒருவருக்கு ' பாசிட்டிவ்'. ஒருவருக்கு 'நெகடிவ்'. இத்தனைக்கும் இரண்டு நாட்களுக்கு முன்தான் மிக நீண்ட வரிசையில் நின்று பெற்ற மதுவை , அவசத்திற்குக் கிட்டிய ஒரே டம்ளரில் இருவரும் பங்கிட்டுக் குடித்திருக்கிறார்கள். மருத்துவ உலகம் " immunity" என்று சொல்லும் காரணத்திற்கு ஏற்ப பாசிட்டிவ் காரருக்கு சர்க்கரை வியாதி இருந்தது. ஆனால் இப்படியான எந்தத் தர்க்கத்துக்குள்ளும் அடைக்க முடியாதபடி வேறு சில காட்சிகளையும்  என்னால் காண முடிந்தது. அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா என சகல  மருத்துவ முறைகளும் முன் வைத்த சகல  மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொண்டார் ஒருவர். அரசு வலியுறுத்திய எல்லாப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒழுங்காகக் கடைபிடித்த பொறுப்புள்ள குடிமகன் அவர். அவருக்கும் ஆய்வில் பாசிட்டிவ்தான் வந்தது. அவர் ஒரு மருத்துவர் என்பது கூடுதல் செய்தி. கொரோனாவை பெரிதாகக் கண்டு கொள்ளாத " உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? " என்பது போல நடந்து கொண்ட அவர் மனைவிக்கு நெகட்டிவ். அவரும் ஒரு மருத்துவரே.

இக்காலத்தின் மரணங்கள், வேலை இழப்புகள், பொருளாதார நசிவுகள், தற்கொலைகள், நாடு முழுதும் நிகழ்ந்த பெரிய இடப் பெயர்வுகள் , அக நெருக்கடிகள் குறித்து நிறைய எழுதப்பட்டிருக்கின்றன.  விவாகரத்தும், கர்ப்பங்களும் ஒரு சேர அதிகரித்தன. மனிதரில் ஒரு பகுதி பட்டினியால் சாக, ஒரு பகுதி "ஒபிசிட்டியால்"  பெருத்து  மீண்டும் மைதானங்களில் மூச்சு வாங்க ஓடத்துவங்கி இருக்கின்றனர். கடவுள்கள் பெருவாரியாக கொன்று புதைக்கபட்ட காலம். புதையுண்ட கடவுள்கள் வீறுகொண்டு எழுந்து நடைபோட்ட காலம். " கடவுளாவது மயிராவது..? " என்கிற கருதுகோளுக்கும், " எல்லாம் அவன் செயல்!" என்கிற கருதுகோளுக்கும் சம வாய்ப்பமைந்த குழப்பமூட்டும் காலம்.
 
  ஒரு எழுத்தாளனாக தனிப்பட்ட முறையில்  எனக்கு இது உவப்பு மிகுந்த காலமே. ஊரடங்கு காலத்தில் அது பற்றி 3 கவிதைகள் எழுதினேன். இந்த எண்ணிக்கையை  அவ்வளவு அரிதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் இது போன்ற விசித்திரமான காலம் ஒரு எழுத்தாளனின் அகத்துள் நிகழ்த்தியிருக்கும் மாற்றங்களை இப்படி எண்ணிக்கை அடிப்படையில்  துல்லியமாக வரையறுத்துச் சொல்ல விட முடியாது.  இந்த ஊரடங்கு காலத்தின் தனிமையைப்  பயன்படுத்தி இரண்டு வருடத்துப் நெடும்பணி  என்று திட்டமிட்டிருந்த " காமத்துப்பால்" உரையை குறித்த காலத்திற்கும் முன்னரே விரைவாக முடிக்க முடிந்தது. இந்தக் காலத்தின் தனிமை இதற்கு உதவியது. இங்கு ஒரு மருத்துவ பணியாளனாக  என்னுடைய எண்ணங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம்  என்று நினைக்கிறேன்.

  ஊரே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கையில் நாங்கள்  அதிகப்படியான பணிச்சுமையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நான் பணி புரிவது கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் . அங்கு கொரோனோ நோயாளிகளுக்கு சிசிக்கை செய்யும் வசதி இல்லை. ஆகவே அருகே இருக்கும் அரசு மருத்துவ மனைகளுக்குத்தான் பரிந்துரை செய்வோம். இந்தக் காலத்தில் அரசு மருத்துவமனைகள்தான் பன் மடங்கு வேலைப் பளுவால் தள்ளாடின. மருத்துவர்கள், செவிலியர்கள்,மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் அதிகப்படியான உழைப்பத் தர வேண்டி இருந்தது.குறிப்பாக செவிலியர்களின் சேவை மனித இனம் மனதில் வைத்த போற்ற வேண்டிய ஒன்றுதான். நாம் இணையத்தில் கண்ட கண்கலங்க வைக்கும் உண்ர்வுப் பூர்வமான காட்சிகள் கொஞ்சம் தான். வீடியோவாகாத, சொன்னால் எளிதில்  விளங்கிக் கொள்ள முடியாத பல இன்னல்களுக்கு அவர்கள் ஆளானார்கள்.  

  இந்தக் காலத்தில் எங்களுக்கு இருந்த  சவால்களில் குறிப்பிடத்தக்கது போக்குவரத்து. போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்ட நிலையில் மருத்துவப் பணியாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானர்கள். எனது வீட்டுக்கும், அலுவலகத்துக்குமாக போய் வர 55 கி.மீ. இரு சக்கர வாகனத்தில்தான் தினமும் பயணம். வண்டி பழுதாகி பாதி வழியில் நின்று விட்டால் பழுது நீக்க ஒரு உபாயமும் இல்லை. உலகமே பூட்டிக் கிடக்கிறதல்லவா? பெட்ரோல் நிலையங்களும் நேரக் கட்டுப்பாட்டுடன்தான் இயங்கின. இங்கு இந்தக் கட்டுரையை சுவாரஸ்யமாக்க விரும்பினால்,  என் வண்டியும்  பாதி வழியில் நின்றுவிட்டது என்று நான் எழுதி விடலாம் ஆனால் " சத்தியமூர்த்தி"யான நான் அப்படி எழுத மாட்டேன். ஆனால் நிச்சயம் பாதி வழியில் நின்று பரிதவித்த வாகனங்கள் நிறையவே இருக்கும்.
 
   சில  இளைஞர்களுக்கு திடீரென ஊர்ப்பாசம் பொங்கி வர,  அவர்கள் தங்கள் ஊர் எல்லையை வேலியிட்டுக் காத்து நின்றார்கள். நானும் அப்படி சிக்கிக் கொண்டேன்.  என் அலுவலகத்துக்கு ஐந்தாறு கி.மீ சுற்றிப் போக வேண்டியிருந்தது. அப்படியான சுற்றுப்பாதைகள் பெரிதும் ஆள் நடமாட்டம் அற்ற காட்டுப் பாதைகளாக இருந்தன. நானே  நெஞ்சுக்குள் பீதியை மறைத்துக் கொண்டு " என்னதான் நடக்கும் நடக்கும் நடக்கட்டுமே" என்கிற வாத்தியார் பாடலை அடிக்கடி முணுமுணுக்க நேர்ந்தது எனும்போது பெண் ஊழியர்களின் நிலை குறித்து விளக்கத் தேவையில்லை.

  ஒரு பக்கம் சாவு விழுந்து கொண்டிருந்தாலும், மக்களில் ஒரு பிரிவினர் இது குறித்து எந்த அக்கறையும் இல்லாமல்தான் இன்றுவரை இருக்கிறார்கள். எவ்வளவு கண்டித்துச் சொல்லியும், அபராதம் விதித்தும் முககவசம் அணிவதை நூறு சதவீதம் பின்பற்ற வைக்க இயலவில்லை. மக்களில் சிலர்  மருத்துவ மனைக்கே மாஸ்க் இல்லாமல்தான் வருகிறார்கள். சென்ற வாரம் அப்படி வந்த நோயாளி ஒருவரை மாஸ்க் உபயோகிக்கச் சொல்லி வற்புறுத்தும் போது " கோரோனோ ஒரு அரசியல் நாடகம்.. அமெரிக்க சதி " என்று அவர் உறுதிபட மறுத்து விட்டார்.  இத்தனைக்கும் அவருக்கும் தீவிரவார இடதுசாரி இயக்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பது  போலத் தெரியவில்லை. நெற்றியில் திருநீறு கமழ்ந்தது.

  தொற்று கண்டவர்களை வீடுகளிலிருந்து மருத்துவமணைகளுக்கு அனுப்பி வைப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. ஓயாமல் இயங்கிக் கொண்டிருந்த " 108" ஆம்புலன்ஸ் சேவையால்  எல்லா நோயாளிகளையும் உடனே அழைத்துப் போக இயலவில்லை. நான்கைந்து மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் நோயாளிகளின் வீட்டிலேயே காவல் காக்க வேண்டியிருந்தது. சமயங்களில் அந்த நெடிய காத்திருப்பு நள்ளிரவிலும் நிகழ்ந்தது.108 ல் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்ட நோயாளியொருவர் அடுத்தநாள் அங்கிருந்து தப்பி ஓட அவரைத் தேடி அலைந்த சம்பவமும்  நடந்தது. நோய் ஒழிப்புக்காக வந்து குவிந்த மருந்துகள், மாஸக் மற்றும் பிற உபகரணங்களை பெற்று வர நான் அடிக்கடி வெகு தொலைவு  பயணிக்க வேண்டியிருந்தது. மருத்துவர்கள் உள்ளிட்ட சகல பணியாளர்களும் சமயங்களில் உயிருக்குத் துணிய வேண்டி வந்தது.   ஆய்வக நுட்புனர்கள் சளி பரிசோதனையின் போது அணிந்து கொள்வதற்காக வழங்கப்பட்ட " PPE kit " எனப்படும் கவச உடைகளை கோடைக் காலத்தில் அணிந்து கொள்வது கடும் வேதனையாக இருந்திருக்கக் கூடும்.

   இதோ இப்போது தடுப்பூசிகள் வந்து விட்டன. " covishield ", " covaxin" என்கிற இரண்டு தடுப்பூசிகள்  நாடு முழுதும் இலவசமாக போடப்பட்டு வருகின்றன. முதலில் சில குறிப்பிட்ட மையங்களில் துவங்கப்பட்ட இந்த சேவை இப்போது "மினி கிளினிக்குகள்" வரை விரிவு படுத்தப்பட்டுள்ளது. இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு  வேறுபாடுகள் இல்லாத போதே ஊசி செலுத்தப்படுகிறது. செலுத்திய பின் அரைமணி நேரம்  மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு நீங்கள் உரிய அறிவுரைகளுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள். அரசால் அங்கீகரிக்கப்ட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை அவசியம்.

 ஆரம்பத்தில் சில மருத்துவர்களே கூட ஊசி செலுத்த தயங்கினார்கள் என்பது உண்மையே. ஆனால் மக்கள் இப்போது தடுப்பூசியில் கொஞ்சம் ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கிறார்கள். இத்திட்டம் அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படுத்தப் படுவதாக முகநூலில் சிலர் பாராட்டி எழுதியிருந்ததைப் பார்க்க முடிந்தது. தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்பதால் அவர்களது வருகையும் நிகழ்கிறது.

  சிலர் வெகு நாட்களுக்குப் பிறகு இந்த தடுப்பூசி சேவைக்காகத் தான் அரசு மருத்துவ மனைகளுக்கு விஜயம் செய்கிறார்கள். அவர்கள் பெரிதாக அலுத்துக் கொள்ளும் படிக்கு சேவைகளில் குறை ஏதும் இருப்பதில்லை. ' வாழ்நாளில் போலீஸ் ஸ்டேசனை  மிதித்ததில்லை' என்று ஒரு வகை இருப்பதைப் போன்றே ' வாழ்நாளில் அரசு மருத்துவ மனையை மிதிக்க மாட்டேன்" என்றும் ஒரு க்ரூப் உண்டு. அவர்களுக்காக ரூ 250 செலவில் சில தனியார் மருத்து மனைகளிலும் இந்த சேவை வழஙகப்பட்டு வருகிறது. 

   அறிவியல் என்பது உரையாடி, உரையாடி  பரிசோதித்து, பரிசோதித்து முன்னேறி செல்லும் ஒரு  துறை. ஆமாம்...அது மாற்றி மாற்றித்தான் பேசும். அது தடுக்கித் தடுக்கி நடக்கும் ஒரு குழந்தை தான். ஆனால் நமக்கும் அதை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் அதன் எல்லாப்  பேச்சிற்கும்  செவி கொடுக்க வேண்டியுள்ளது.


  நான் ஒரு விஞ்ஞானியோ, மருத்துவ வல்லுநரோ இல்லை. ஒரு எளிய மருத்துவ ஊழியன். இந்தத் தடுப்பூசிகள்  குறித்து என்னால் உறுதி சொல்ல முடிந்ததல்லாம் " நான் போட்டுக் கொண்டேன்....  இக்கணம் வரை உபாதைகள் ஏதுமின்றி உயிரோடு இருக்கிறேன் " என்பதை மட்டும் தான்.

   தன் நீளமான  பெயரைக் காட்டிலும்,  இருமடங்கு நீளமான மருத்துவப் படிப்புகளை  வெவ்வேறு நாடுகளில் கற்றுத் தேர்ந்து தாயகம் திரும்பிய மருத்துவர் ஒருவர் என்னிடம் சொன்னார்..." உடம்புக்குள்ள என்ன நடக்குத்துன்னு யாருக்கு என்ன தெரியும்? " இப்படியாக  அறிவியலால் எதையும் உறுதிபட உரைக்க முடியாது என்பதால் என்னாலும் எதற்கும் உறுதி கூற இயலாது. தவிர , அந்த திருநீறு கழந்த தீவிரவாத இடதுசாரிக்கு சளைத்தவர்களல்ல நமது பேய்ப்பர்களும், உலகப் பொருளாதார சந்தையும்.

         நன்றி: காலச்சுவடு- ஏப்ரல்-21

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம