Skip to main content

உன்னை விடவும்

 




ன்னை விடவும்

உன் உடல்

கருணை மிக்கது.

அருள் பூண்டது.


உன்னைவிடவும் 

உன் உடல்

இதயப்பூர்வமானது.

பொய்யுரைக்க நாணுவது.


உன்னைவிடவும் அது

கவித்துவமானது.

நறுமணம் கமழ்வது.


உன்னைவிடவும் அது

இதமானது.

பளிங்கு போன்றது.


உன்னைவிடவும் அது

அகந்தை அழிந்தது.

அழகு பூத்து  உறங்குவது.


உன்னைவிடவும் அது

ஊழலில் குறைந்தது.

தில்லுமுல்லுகளில் விருப்பமற்றது


உன்னைப்போன்று 

கணக்குகளில் சமத்தன்று

அது எளிதாக ஏமாறுவது


உன்னைப் போன்று ஊர்வதன்று

அது பறப்பது.


உன்னை விடவும்

உன் உடல்

கருணை மிக்கது.

அருள் பூண்டது.

மேலும்

கண்ணீரைக் காணச் சகியாதது.


நீ மட்டும்

அடிக்கடி

அதன் காதைப் பிடித்துத் திருகாதிரு!


மீதியை

அதனிடம் நான் பேசிக் கொள்கிறேன்.


Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.