அந்தியை படமெடுக்க கோணம் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. அங்கேயும் இங்கேயும் ஓடி கடைசியில் ஓரிடத்தைக் கண்டுபிடித்து முழந்தாளில் அமர்ந்தாள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அதனோடு பேசத் துவங்கிவிட்டாள். " இடுப்பில் கை வைத்து நில்" தன் சின்ன மகளை அதட்டுவது போலே அதட்டுகிறாள். அந்தியை அழகி படமெடுக்கையில் அவளைப் பார்த்தால் போதும் அந்தியைப் பார்த்தது போலே. |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments