நீ மட்டும் நடனிப்பதை நிறுத்திவிட்டால் யாவும் நின்றுவிடும். ஆந்தைக்குத் துணையாக மொட்டை மாடியில் திரிய மாட்டேன். துருவேறிய பழந்தகரக் குரலால் பாட்டெடுக்கத் துணிய மாட்டேன் ஓய்வில் இருக்கும் சொற்களை கசையடியால் துன்புறுத்தி கவிதையில் கட்டி இழுக்க மாட்டேன். மகளின் பிறந்த நாளை மறந்துவிட்டு அவளை கண்ணீர் வடிக்க விட மாட்டேன் நீதிநூல் குவியல் மீது செருப்புக் காலால் நடக்க மாட்டேன் நாவே அஞ்சி நடுநடுங்கும் பொய்களை ஒரு போதும் சொல்ல மாட்டேன் அடீ ! பேச்சைப் பாடாதே! பேச்சில் ஆடாதே! நடனம் ஒரு பொல்லாத தீங்கு ஆயினும் நீ அதனை நிறுத்தாதே! |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments