Skip to main content

கொழு நிழலி

 



டற்பயிற்சி மைதானத்துக்கு அருகில்

வேங்கை மரத்திற்கு அடியில்

இன்னொரு வேங்கை மரமென

திகழ்கிறாள்.

அவள் கொழு நிழலின்  கீழ்

குழுமியிருக்கின்றனர் சிலர்.


இளமையைக் கடந்து விட்டவள்

வசீகரம் குறைந்தவள்.

காமத்தால் எரிக்க முடியாதவள்

கொஞ்சம்

கலகலப்பானவள்


ஒருவன் நெல்லிக்கனி சாறு பருகிக் கொண்டிருக்கிறான்


ஒருவனுக்கு கொள்ளு ரசம்


ஒருவன் அவித்த சுண்டலை வாங்குகிறான்.


அவளது

வதங்கிய கீரையை

யாரும் நம்புவது போலத் தெரியவில்லை.


ஆயினும்

அவள் அண்மையில் இருக்கையில்

இரத்தம் சுத்தகரிக்கப்படுவதை

நன்றாகவே

உணர முடிகிறது


வயிற்றுப் புண் 

உடனடியாக சரியாகி விடுகிறது.


அவள் 

"இதயத்திற்கு நல்லது" 

என்று 

எழுதிப் போட்டிருப்பதை படித்துப் பார்த்து 

இதயம் 

"ஆம்" என்கிறது.


பலஹீனத்தால் துவண்டிருக்கும்

இந்த அதிகாலையில்

முளைகட்டிய பயிர் அருகில்

கொஞ்ச நேரம்

நின்று விட்டு வந்தேன்.

Comments

Thendral said…
அருமையான வரிகள் 🌳

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...