போலிஸ் ஸ்டேசனில் ஒரு முறை மண்டியிட்டுள்ளேன் பஞ்சாயத்துப் போர்டு கிளர்க்கின் முன் ஒரு முறை ஒரு முறை தாசில்தார் அலுவலகத்தில் அமர்ந்த பாவனையில் விழுந்து கிடந்துள்ளேன் அந்த தணிக்கை அதிகாரி என் கோணல் சிரிப்பை பூட்ஸ் காலை நாவால் நக்குவது என்று சரியாகவே புரிந்து கொண்டார் அதனால் "போ" என்று விட்டுவிட்டார். பெரிய அரிவாளின் முன் ஒரு முறை எச்சில் விழுங்கி இருக்கிறேன் குருட்டு தெய்வங்களின் காலில் சில முறை விழுந்து கிடந்துள்ளேன் விட்டுவிடச் சொல்லி நீதி நெறி நூல்களின் முன் அழுது அழுது அரற்றியுள்ளேன் உன் முன் மண்டியிடுவது கமலப் பொய்கையுள் மெல்லச் சரிவது ரோஜாவாகி ரோஜா அளிப்பது கனத்த எடையால் துவளும் என்னை சற்றே இறக்கி வைப்பது |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments