Skip to main content

மூன்று கவிதைகள்





ஓடுகிற பையன் எமோஜி


நான் ஒரு இக்கட்டான தருணத்தில்

அவனை

வாட்ஸ் அப்பில் சந்தித்தேன்


சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டு

ஓடும் பையனாக


சொல்லி ஆக வேண்டியதை

சொல்லிவிட்டு ஓடும் பையனாக


அவன் ஒரு பொடியன் என்பதால்

“விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..” என்று சொல்லிவிடுவது

அவனுக்கு எளிது

ஆகவே

சொல்லியும் சொல்லாமல் இருப்பதில்

அவன் சமத்தன்


அவன் வெறுமனே ஒரு கேள்வி

அவனுக்குப் பதில்களில் ஆர்வமில்லை

ஆகவே

எதையும் அவன் நின்று கேட்பதில்லை


“இந்த வாழ்வில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களில்லை ..”

என்று யாரோ ஒரு சாமியார் சொன்னதை

அரைகுறையாக கேட்டுவிட்டு வந்த

அப்பாவிச் சிறுவனவன்,

“சாப்பிட்டீங்களா..?”

என்று கேட்டுவிட்டு

ஓடி விடுவான்.



நாசகாரக் கும்பல்


னக்குத் தெரியும்

இங்கு காணும்

எல்லாத் துன்பங்களுக்கும்

இந்தக் கவிஞர்கள்தான் காரணம்


மண்

மண்ணென்றிருந்தது

இவர்கள் அதில்

சொர்க்கத்தைக் கட்டி எழுப்பினார்கள்


சொர்க்கம் என்ற ஒன்று எழுந்ததால்

அதிலிருந்து

நரகம் என்று ஒன்று

தானே எழுந்து கொண்டது


கண்ணெறிருந்த கண்ணில்

இவர்கள் கயலைத் தூக்கிப் போட்டார்கள்


இடையென்றிருந்த இடையில்

வேலியில் படரும்

கொடியைக் கொண்டு வந்து

சுற்றி விட்டார்கள்


பேசினால் விளங்கிவிடும்

ஒவ்வொன்றையும்

இவர்கள் பாடிப் பாடி ஜோடிப்பார்கள்


இவர்தம் குலத்தொழிலாவது

உள்ளதை உள்ளபடி விட்டு வைக்காதது

கூடவே

ஊதி ஊதி பெருக்குவது


துள்ளிக் குதிக்காதது

சோர்ந்து விழாது


நம்புங்கள்,

கவிதைதான்

கடவுளின் நயவஞ்சகம்


சற்றே உப்புக் குறைவான ஒரு பண்டத்தை

நாம் கொஞ்சம் சமாளித்துக் கொள்ள முடியுமெனில்

இந்த நாசகாரக் கும்பலை

வேரோடும் வேரடி மண்ணோடும்

அழித்து விடலாம்.



இரவுக் காவலாளியின் ” அனுபவம் புதுமை”


1.

ரு நாளும் வாராமல் இராத இரவு

இதோ வந்து விட்டது

கூடவே வந்துவிட்டது

இரவின் குரல்


இரவின் குரலாவது

ஸ்ரீனிவாசின் குரல்


இரவின் ராஜா

பேங்கோஸ் குதிரையில்

வந்திறங்குகிறார்


மனிதர்கள்

ஓய்ந்தடங்கிய பின்பு

இரவு பாடத் துவங்குகிறது


இரவு பாடும் போது

விலகிச் செல்கிறது இருட்டு


பகலெல்லாம் மூடிக்கிடந்த வானத்தை

மெல்ல மெல்ல திறக்கிறது

அப் பாட்டு


இரவைப் போல

ஆழமான பாடகரென்று இன்னொருவரில்லை


2.


அண்ணாந்த கதியில்

அவள் சொன்னாள்…


“ இரவு மெல்ல மெல்ல

பாடத் துவங்கி விடுகிறது , இல்லையா?”


அதே கதியில் நான் சொன்னேன்..


“ஆம். அது ஸ்ரீனிவாசைப் போலச் செய்யப் பார்க்கிறது..”


3.


“பகலெல்லாம் பி.பி. எஸ் பாடுவதில்லையா என்ன?’


பாடத்தான் செய்கிறார்

ஆனால்

அப்போது அவர் ஒரு

பரிதாபத்திற்குரிய பாடகர்


4.


எல்லோரும் நினைப்பது போல

இரவில் பாடுவது நிலவல்ல


எப்போதும் வெளிச்சம்தான்

பாட வேண்டும் என்றில்லை


5.


பாட்டின் மர்மமே..

நீ தானா அது?

இரவில் ஜொலிக்கும் அது


6.


கேட்பவர் பாடுகிற

பாடல் என்பது

வேறு.



https://akazhonline.com/?p=7326

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...