Skip to main content

மூன்று கவிதைகள்





ஓடுகிற பையன் எமோஜி


நான் ஒரு இக்கட்டான தருணத்தில்

அவனை

வாட்ஸ் அப்பில் சந்தித்தேன்


சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டு

ஓடும் பையனாக


சொல்லி ஆக வேண்டியதை

சொல்லிவிட்டு ஓடும் பையனாக


அவன் ஒரு பொடியன் என்பதால்

“விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..” என்று சொல்லிவிடுவது

அவனுக்கு எளிது

ஆகவே

சொல்லியும் சொல்லாமல் இருப்பதில்

அவன் சமத்தன்


அவன் வெறுமனே ஒரு கேள்வி

அவனுக்குப் பதில்களில் ஆர்வமில்லை

ஆகவே

எதையும் அவன் நின்று கேட்பதில்லை


“இந்த வாழ்வில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களில்லை ..”

என்று யாரோ ஒரு சாமியார் சொன்னதை

அரைகுறையாக கேட்டுவிட்டு வந்த

அப்பாவிச் சிறுவனவன்,

“சாப்பிட்டீங்களா..?”

என்று கேட்டுவிட்டு

ஓடி விடுவான்.



நாசகாரக் கும்பல்


னக்குத் தெரியும்

இங்கு காணும்

எல்லாத் துன்பங்களுக்கும்

இந்தக் கவிஞர்கள்தான் காரணம்


மண்

மண்ணென்றிருந்தது

இவர்கள் அதில்

சொர்க்கத்தைக் கட்டி எழுப்பினார்கள்


சொர்க்கம் என்ற ஒன்று எழுந்ததால்

அதிலிருந்து

நரகம் என்று ஒன்று

தானே எழுந்து கொண்டது


கண்ணெறிருந்த கண்ணில்

இவர்கள் கயலைத் தூக்கிப் போட்டார்கள்


இடையென்றிருந்த இடையில்

வேலியில் படரும்

கொடியைக் கொண்டு வந்து

சுற்றி விட்டார்கள்


பேசினால் விளங்கிவிடும்

ஒவ்வொன்றையும்

இவர்கள் பாடிப் பாடி ஜோடிப்பார்கள்


இவர்தம் குலத்தொழிலாவது

உள்ளதை உள்ளபடி விட்டு வைக்காதது

கூடவே

ஊதி ஊதி பெருக்குவது


துள்ளிக் குதிக்காதது

சோர்ந்து விழாது


நம்புங்கள்,

கவிதைதான்

கடவுளின் நயவஞ்சகம்


சற்றே உப்புக் குறைவான ஒரு பண்டத்தை

நாம் கொஞ்சம் சமாளித்துக் கொள்ள முடியுமெனில்

இந்த நாசகாரக் கும்பலை

வேரோடும் வேரடி மண்ணோடும்

அழித்து விடலாம்.



இரவுக் காவலாளியின் ” அனுபவம் புதுமை”


1.

ரு நாளும் வாராமல் இராத இரவு

இதோ வந்து விட்டது

கூடவே வந்துவிட்டது

இரவின் குரல்


இரவின் குரலாவது

ஸ்ரீனிவாசின் குரல்


இரவின் ராஜா

பேங்கோஸ் குதிரையில்

வந்திறங்குகிறார்


மனிதர்கள்

ஓய்ந்தடங்கிய பின்பு

இரவு பாடத் துவங்குகிறது


இரவு பாடும் போது

விலகிச் செல்கிறது இருட்டு


பகலெல்லாம் மூடிக்கிடந்த வானத்தை

மெல்ல மெல்ல திறக்கிறது

அப் பாட்டு


இரவைப் போல

ஆழமான பாடகரென்று இன்னொருவரில்லை


2.


அண்ணாந்த கதியில்

அவள் சொன்னாள்…


“ இரவு மெல்ல மெல்ல

பாடத் துவங்கி விடுகிறது , இல்லையா?”


அதே கதியில் நான் சொன்னேன்..


“ஆம். அது ஸ்ரீனிவாசைப் போலச் செய்யப் பார்க்கிறது..”


3.


“பகலெல்லாம் பி.பி. எஸ் பாடுவதில்லையா என்ன?’


பாடத்தான் செய்கிறார்

ஆனால்

அப்போது அவர் ஒரு

பரிதாபத்திற்குரிய பாடகர்


4.


எல்லோரும் நினைப்பது போல

இரவில் பாடுவது நிலவல்ல


எப்போதும் வெளிச்சம்தான்

பாட வேண்டும் என்றில்லை


5.


பாட்டின் மர்மமே..

நீ தானா அது?

இரவில் ஜொலிக்கும் அது


6.


கேட்பவர் பாடுகிற

பாடல் என்பது

வேறு.



https://akazhonline.com/?p=7326

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...