ஓடுகிற பையன் எமோஜி நான் ஒரு இக்கட்டான தருணத்தில் அவனை வாட்ஸ் அப்பில் சந்தித்தேன் சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டு ஓடும் பையனாக சொல்லி ஆக வேண்டியதை சொல்லிவிட்டு ஓடும் பையனாக அவன் ஒரு பொடியன் என்பதால் “விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..” என்று சொல்லிவிடுவது அவனுக்கு எளிது ஆகவே சொல்லியும் சொல்லாமல் இருப்பதில் அவன் சமத்தன் அவன் வெறுமனே ஒரு கேள்வி அவனுக்குப் பதில்களில் ஆர்வமில்லை ஆகவே எதையும் அவன் நின்று கேட்பதில்லை “இந்த வாழ்வில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களில்லை ..” என்று யாரோ ஒரு சாமியார் சொன்னதை அரைகுறையாக கேட்டுவிட்டு வந்த அப்பாவிச் சிறுவனவன், “சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டுவிட்டு ஓடி விடுவான். நாசகாரக் கும்பல் எனக்குத் தெரியும் இங்கு காணும் எல்லாத் துன்பங்களுக்கும் இந்தக் கவிஞர்கள்தான் காரணம் மண் மண்ணென்றிருந்தது இவர்கள் அதில் சொர்க்கத்தைக் கட்டி எழுப்பினார்கள் சொர்க்கம் என்ற ஒன்று எழுந்ததால் அதிலிருந்து நரகம் என்று ஒன்று தானே எழுந்து கொண்டது கண்ணெறிருந்த கண்ணில் இவர்கள் கயலைத் தூக்கிப் போட்டார்கள் இடையென்றிருந்த இடையில் வேலியில் படரும் கொடியைக் கொண்டு வந்து சுற்றி விட்டார்கள் பேசினால் விளங்கிவிடும் ஒவ்வொன்றையும் இவர்கள் பாடிப் பாடி ஜோடிப்பார்கள் இவர்தம் குலத்தொழிலாவது உள்ளதை உள்ளபடி விட்டு வைக்காதது கூடவே ஊதி ஊதி பெருக்குவது துள்ளிக் குதிக்காதது சோர்ந்து விழாது நம்புங்கள், கவிதைதான் கடவுளின் நயவஞ்சகம் சற்றே உப்புக் குறைவான ஒரு பண்டத்தை நாம் கொஞ்சம் சமாளித்துக் கொள்ள முடியுமெனில் இந்த நாசகாரக் கும்பலை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து விடலாம். இரவுக் காவலாளியின் ” அனுபவம் புதுமை” 1. ஒரு நாளும் வாராமல் இராத இரவு இதோ வந்து விட்டது கூடவே வந்துவிட்டது இரவின் குரல் இரவின் குரலாவது ஸ்ரீனிவாசின் குரல் இரவின் ராஜா பேங்கோஸ் குதிரையில் வந்திறங்குகிறார் மனிதர்கள் ஓய்ந்தடங்கிய பின்பு இரவு பாடத் துவங்குகிறது இரவு பாடும் போது விலகிச் செல்கிறது இருட்டு பகலெல்லாம் மூடிக்கிடந்த வானத்தை மெல்ல மெல்ல திறக்கிறது அப் பாட்டு இரவைப் போல ஆழமான பாடகரென்று இன்னொருவரில்லை 2. அண்ணாந்த கதியில் அவள் சொன்னாள்… “ இரவு மெல்ல மெல்ல பாடத் துவங்கி விடுகிறது , இல்லையா?” அதே கதியில் நான் சொன்னேன்.. “ஆம். அது ஸ்ரீனிவாசைப் போலச் செய்யப் பார்க்கிறது..” 3. “பகலெல்லாம் பி.பி. எஸ் பாடுவதில்லையா என்ன?’ பாடத்தான் செய்கிறார் ஆனால் அப்போது அவர் ஒரு பரிதாபத்திற்குரிய பாடகர் 4. எல்லோரும் நினைப்பது போல இரவில் பாடுவது நிலவல்ல எப்போதும் வெளிச்சம்தான் பாட வேண்டும் என்றில்லை 5. பாட்டின் மர்மமே.. நீ தானா அது? இரவில் ஜொலிக்கும் அது 6. கேட்பவர் பாடுகிற பாடல் என்பது வேறு. |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments