“நீங்கள் CCTV யால் கண்காணிக்கப்படுகிறீர்கள் “ இந்த வாசகம் இப்போது பரவலாகக் காணக்கிடைக்கிறது. பெரு நகர வீதி முதல் சிறு வணிகக் கூடம் வரை இதற்கென்று ஒரு இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. CCTV- க்கு முன்பே கண்காணிப்பு பிறந்து விட்டது கண்காணிப்பே! நீ இந்த பூமியில் பிறந்த இரண்டாவது மனிதனின் உடன் பிறப்பு தானே? போலீஷ் என்கிற CCTV முதலாளி என்கிற CCTV நீதியிலிருந்து மனிதன் தப்பிவிட முடியுமா என்ன? எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் கடவுள் CCTV - யைப் போல ஒருவனுக்கு இன்னொருவன் CCTV அவனை அவனே உற்று நோக்கும் தருணத்தில் அங்கு தோன்றுகிறது ஒரு CCTV பேரன்பு எனில் அது பெரிய CCTV யா என்ன? வீடு வீதி வரை வந்து வழியனுப்பி வைத்துவிடுவதாக எண்ணிக் கொண்டிருப்பது நமது கற்பிதங்களில் ஒன்று நமது வீடுகளின் உச்சியில் கழுத்தை நீட்டிக் கொண்டு ஒரு பலஹீனமான உபகரணம் ஈசனின் தலையில் உடைந்த பிறை போல. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments
உடைந்த பிறை போல. Nalla karpanai 😇