Skip to main content

CCTV யின் தலையில் ஒரு CCTV



“நீங்கள் CCTV யால் கண்காணிக்கப்படுகிறீர்கள் “

இந்த வாசகம் 

இப்போது 

பரவலாகக் காணக்கிடைக்கிறது.


பெரு நகர வீதி முதல்

சிறு வணிகக் கூடம் வரை

இதற்கென்று ஒரு இடம்

உறுதி செய்யப்பட்டுவிட்டது.


CCTV-  க்கு முன்பே

கண்காணிப்பு பிறந்து விட்டது


கண்காணிப்பே!

நீ

இந்த பூமியில் பிறந்த 

இரண்டாவது மனிதனின்

உடன் பிறப்பு தானே?


போலீஷ் என்கிற  CCTV


முதலாளி என்கிற  CCTV


நீதியிலிருந்து மனிதன் தப்பிவிட  முடியுமா என்ன?


எல்லாவற்றையும் பார்த்துக் 

கொண்டிருக்கிறார் கடவுள்

CCTV - யைப் போல 


ஒருவனுக்கு 

இன்னொருவன் CCTV


அவனை அவனே

உற்று நோக்கும் தருணத்தில்

அங்கு தோன்றுகிறது

ஒரு  CCTV


பேரன்பு எனில்

அது பெரிய  CCTV யா என்ன?


வீடு

வீதி வரை வந்து 

வழியனுப்பி வைத்துவிடுவதாக  

எண்ணிக் கொண்டிருப்பது

நமது கற்பிதங்களில் ஒன்று


நமது வீடுகளின் உச்சியில் 

கழுத்தை நீட்டிக் கொண்டு

ஒரு பலஹீனமான உபகரணம்


ஈசனின் தலையில்

உடைந்த பிறை போல.


Comments

Thendral said…
ஈசனின் தலையில்

உடைந்த பிறை போல. Nalla karpanai 😇

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...