‘கபீர்’ என்கிற பெயர் அழைத்ததால் மீரட் நகரில் ஒரு இசைக்கூடத்திற்குள் நுழைந்தேன். இல்லாதவை இல்லை என்பது போல எங்கும் நிறைந்து ததும்பும் கருவிகள் சின்னப் புல்லாங்குழலிருந்து பெரிய சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் பியானோ வரை அத்தனையத்தனைக்கும் மத்தியில் வெறுமனே நின்று கொண்டிருந்தால் போதும் என்றிருந்தது பிறகு தோன்றியது அல்ல உறுதியாக இது வெறுமனே அல்ல கடைச் சிப்பந்தி கேட்டார்... “ எங்கிருந்து வருகிறீர்கள்?” உள்ளுக்குள் முணுமுணுத்தேன்.. “குரங்கிலிருந்து…..” |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments