‘கபீர்’ என்கிற பெயர் அழைத்ததால் மீரட் நகரில் ஒரு இசைக்கூடத்திற்குள் நுழைந்தேன். இல்லாதவை இல்லை என்பது போல எங்கும் நிறைந்து ததும்பும் கருவிகள் சின்னப் புல்லாங்குழலிருந்து பெரிய சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் பியானோ வரை அத்தனையத்தனைக்கும் மத்தியில் வெறுமனே நின்று கொண்டிருந்தால் போதும் என்றிருந்தது பிறகு தோன்றியது அல்ல உறுதியாக இது வெறுமனே அல்ல கடைச் சிப்பந்தி கேட்டார்... “ எங்கிருந்து வருகிறீர்கள்?” உள்ளுக்குள் முணுமுணுத்தேன்.. “குரங்கிலிருந்து…..” |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments