Skip to main content

மூன்று கவிதைகள்




முதல் கனி 



அந்தக் குழந்தை

உலகிற்குப் புதுசு


மூடிய காருக்குள்ளிருந்து

கண்ணாடி வழியே

வெளியே பார்த்தபடி வருகிறது


சிக்னல் நிறுத்தத்தில்  ஒரு சிறுவன்

காக்கி நிஜாரில் மேலாடையின்றி

வியாபாரி போல் வந்தவன்


அவன் தன்

அழுக்குக் கையால்

கூடைக் கொய்யாக்களில்

ஒன்றினை எடுத்து

குழந்தைக்குக்  காட்டுகிறான்


காட்டிய  கணத்திலேயே

ஊட்டியும் விட்டுவிட்டான்


எட்டினால் தட்டிவிடும்

தூரத்தில்தான் இருக்கிறார்

அதன் அப்பா


ஆனாலும்

அதற்குள்

அவ்வளவு தூரங்கள்

அவரால்

ஓடிவரக் கூடவில்லை.


*


ண்டேன்



சற்றே பெரிய ஊடல் போல


அவள்

சிரி...

சிரி...

சிரி.. 

எனக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்


அவன் 

துளியும் அசைந்துவிடாது 

நின்று கொண்டிருந்தான்


அவள்

கன்னச் சதைகளை 

இழுத்து இழுத்து விட்டாள்

இறுக்கத்துள் கை நுழைத்து

உதடுகளைப்  பிரித்து வைத்தாள்


கடைசிவரை சிரிக்கவில்லை கல்


அங்கே சிரித்துக் கொண்டிருந்த

இன்னொன்றை

நான் கண்டு சிரித்தேன்.


*


னைவியின் முதல் கவிதை



"பாயுது பாயுது நீரு

பல எண்ணங்கள் போலே- வருது

தண்ணீரு..."


என்று முதல் அடி எடுத்தவள்

ஏனோ  கொஞ்ச நேரம்

அங்கேயே நின்று விட்டாள்


ஏரியைக் காட்டிலும்

ஆழத்துள் பாய்ந்தவள் சிந்தையில்

சட்டென்றொரு  தீப்பொறி


‘தண்ணீரை ' அடித்து விட்டு

 'கண்ணீரை' அங்கு இட்டு நிரப்பினாள்


கண்ணீர் வந்தவுடன்

கவிதை வந்துவிட்டது

என்பதில்

அவளுக்கு அவ்வளவு உறுதி


ஆட்டவோ

அசைக்கவோ முடியாத உறுதி


Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...