Skip to main content

மூன்று கவிதைகள்




முதல் கனி 



அந்தக் குழந்தை

உலகிற்குப் புதுசு


மூடிய காருக்குள்ளிருந்து

கண்ணாடி வழியே

வெளியே பார்த்தபடி வருகிறது


சிக்னல் நிறுத்தத்தில்  ஒரு சிறுவன்

காக்கி நிஜாரில் மேலாடையின்றி

வியாபாரி போல் வந்தவன்


அவன் தன்

அழுக்குக் கையால்

கூடைக் கொய்யாக்களில்

ஒன்றினை எடுத்து

குழந்தைக்குக்  காட்டுகிறான்


காட்டிய  கணத்திலேயே

ஊட்டியும் விட்டுவிட்டான்


எட்டினால் தட்டிவிடும்

தூரத்தில்தான் இருக்கிறார்

அதன் அப்பா


ஆனாலும்

அதற்குள்

அவ்வளவு தூரங்கள்

அவரால்

ஓடிவரக் கூடவில்லை.


*


ண்டேன்



சற்றே பெரிய ஊடல் போல


அவள்

சிரி...

சிரி...

சிரி.. 

எனக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்


அவன் 

துளியும் அசைந்துவிடாது 

நின்று கொண்டிருந்தான்


அவள்

கன்னச் சதைகளை 

இழுத்து இழுத்து விட்டாள்

இறுக்கத்துள் கை நுழைத்து

உதடுகளைப்  பிரித்து வைத்தாள்


கடைசிவரை சிரிக்கவில்லை கல்


அங்கே சிரித்துக் கொண்டிருந்த

இன்னொன்றை

நான் கண்டு சிரித்தேன்.


*


னைவியின் முதல் கவிதை



"பாயுது பாயுது நீரு

பல எண்ணங்கள் போலே- வருது

தண்ணீரு..."


என்று முதல் அடி எடுத்தவள்

ஏனோ  கொஞ்ச நேரம்

அங்கேயே நின்று விட்டாள்


ஏரியைக் காட்டிலும்

ஆழத்துள் பாய்ந்தவள் சிந்தையில்

சட்டென்றொரு  தீப்பொறி


‘தண்ணீரை ' அடித்து விட்டு

 'கண்ணீரை' அங்கு இட்டு நிரப்பினாள்


கண்ணீர் வந்தவுடன்

கவிதை வந்துவிட்டது

என்பதில்

அவளுக்கு அவ்வளவு உறுதி


ஆட்டவோ

அசைக்கவோ முடியாத உறுதி


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...