Skip to main content

மூன்று கவிதைகள்




முதல் கனி 



அந்தக் குழந்தை

உலகிற்குப் புதுசு


மூடிய காருக்குள்ளிருந்து

கண்ணாடி வழியே

வெளியே பார்த்தபடி வருகிறது


சிக்னல் நிறுத்தத்தில்  ஒரு சிறுவன்

காக்கி நிஜாரில் மேலாடையின்றி

வியாபாரி போல் வந்தவன்


அவன் தன்

அழுக்குக் கையால்

கூடைக் கொய்யாக்களில்

ஒன்றினை எடுத்து

குழந்தைக்குக்  காட்டுகிறான்


காட்டிய  கணத்திலேயே

ஊட்டியும் விட்டுவிட்டான்


எட்டினால் தட்டிவிடும்

தூரத்தில்தான் இருக்கிறார்

அதன் அப்பா


ஆனாலும்

அதற்குள்

அவ்வளவு தூரங்கள்

அவரால்

ஓடிவரக் கூடவில்லை.


*


ண்டேன்



சற்றே பெரிய ஊடல் போல


அவள்

சிரி...

சிரி...

சிரி.. 

எனக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்


அவன் 

துளியும் அசைந்துவிடாது 

நின்று கொண்டிருந்தான்


அவள்

கன்னச் சதைகளை 

இழுத்து இழுத்து விட்டாள்

இறுக்கத்துள் கை நுழைத்து

உதடுகளைப்  பிரித்து வைத்தாள்


கடைசிவரை சிரிக்கவில்லை கல்


அங்கே சிரித்துக் கொண்டிருந்த

இன்னொன்றை

நான் கண்டு சிரித்தேன்.


*


னைவியின் முதல் கவிதை



"பாயுது பாயுது நீரு

பல எண்ணங்கள் போலே- வருது

தண்ணீரு..."


என்று முதல் அடி எடுத்தவள்

ஏனோ  கொஞ்ச நேரம்

அங்கேயே நின்று விட்டாள்


ஏரியைக் காட்டிலும்

ஆழத்துள் பாய்ந்தவள் சிந்தையில்

சட்டென்றொரு  தீப்பொறி


‘தண்ணீரை ' அடித்து விட்டு

 'கண்ணீரை' அங்கு இட்டு நிரப்பினாள்


கண்ணீர் வந்தவுடன்

கவிதை வந்துவிட்டது

என்பதில்

அவளுக்கு அவ்வளவு உறுதி


ஆட்டவோ

அசைக்கவோ முடியாத உறுதி


Comments

Popular posts from this blog

நடக்கக் கூடாதவை நடப்பதில்லை

பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின்  சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு  வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும்  உண்டு    சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.