Skip to main content

மூன்று கவிதைகள்


உனது லட்சணம்

இந்த முறை
“போகிறேன்..” என்பதை
அவ்வளவு திடமான குரலில் சொன்னாள்

போய்விடுவாள்தான் போல?

எழுந்தவள்
எட்டு வைத்து
நடக்கிறாள்

பின்னோக்கி…
பின்னோக்கி…

உச்சிவெயிலில்
மொட்டைப் பாறையில்
நன்றாகச்
சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு
ஆயுளுக்கும் அசையாத கதியில்
அங்கே என்னடி செய்து கொண்டிருக்கிறாய்?



காலிப்பொன்

கனத்த செல்வமென
கொஞ்ச காலம்
உன்னை என் கைகளில்
ஏந்தியிருந்தேன்.

இந்தக் கைகளில்..
இதே கைகளில்..

காலியாகிக் கிடக்கிற
இதே கைகளில்

இப்பவும்
இவைதான்
வெறுங்கைகள் ஆகுமோ ?

கனத்த செல்வம்
சுடர்ந்த கைகள்



இளம் இசை மாணவனின் புத்துலகு

நான்குமுனைச் சந்திப்பின் மூலையில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இப்படி
‘ரி’ யிலேயே
நின்று கொண்டிருப்பார்
அறிஞர் அண்ணா

விளையாட்டுச் சிறுவர்கள்
தூண்களுக்குப் பின்னே
மறைந்து கொண்டு
சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்
‘பதநி ‘
டுமீல் , டுமீல் என்று வெடிக்கின்றன.

அந்தப் படகு
‘ஸரிகம’ வில் ஏறி
‘ஸ்நிதப’ வில் இறங்குகிறது

ஒருவன்
இன்னொருவனின் முகத்துக்கு நேரே
‘க’ வை நீட்டி
வசை மொழிகிறான்
‘ க’ வை அவ்வளவு
நெருக்கத்தில் கண்டவனின் கண்கள்
இரத்தமாகின்றன.

சப்தம் முடக்கப்பட்ட
கலவிப் படத்தில்
கவ்வி இழுத்து
மெல்ல
விடப்படும் கீழுதடு
‘ரி ‘ என்று ரீங்கரித்துவிடுகிறது

இரண்டு
‘ஸ’ க்கள்
இறுக அணைத்து கொண்டு
வெற்றியை
கூச்சலிட்டுக் கொண்டாடுவதைப் பார்க்கிறேன்

இசைப்பலகை
நெஞ்சிலேறிய பிறகு
உலகம் தாளமாகிறது

என்னைக் கொல்வதற்கு
கத்தியை உருவியபடி
வெறி கொண்டு ஓடிவரும்
கந்துவட்டிக்காரரே…!

பார்த்து ….பார்த்து
’ப ’ வுக்கும், ’ த ’ வுக்கும் இடையே
’த’ வுக்கும் , ‘ நி’ க்கும் இடையே
அய்யய்யோ…
ஒரே அபஸ்வரங்கள்

நாராசம்..!
நாராசம்…!


(நன்றி ; அகழ்)

Comments

Popular posts from this blog

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...