Skip to main content

மூன்று கவிதைகள்


உனது லட்சணம்

இந்த முறை
“போகிறேன்..” என்பதை
அவ்வளவு திடமான குரலில் சொன்னாள்

போய்விடுவாள்தான் போல?

எழுந்தவள்
எட்டு வைத்து
நடக்கிறாள்

பின்னோக்கி…
பின்னோக்கி…

உச்சிவெயிலில்
மொட்டைப் பாறையில்
நன்றாகச்
சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு
ஆயுளுக்கும் அசையாத கதியில்
அங்கே என்னடி செய்து கொண்டிருக்கிறாய்?



காலிப்பொன்

கனத்த செல்வமென
கொஞ்ச காலம்
உன்னை என் கைகளில்
ஏந்தியிருந்தேன்.

இந்தக் கைகளில்..
இதே கைகளில்..

காலியாகிக் கிடக்கிற
இதே கைகளில்

இப்பவும்
இவைதான்
வெறுங்கைகள் ஆகுமோ ?

கனத்த செல்வம்
சுடர்ந்த கைகள்



இளம் இசை மாணவனின் புத்துலகு

நான்குமுனைச் சந்திப்பின் மூலையில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இப்படி
‘ரி’ யிலேயே
நின்று கொண்டிருப்பார்
அறிஞர் அண்ணா

விளையாட்டுச் சிறுவர்கள்
தூண்களுக்குப் பின்னே
மறைந்து கொண்டு
சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்
‘பதநி ‘
டுமீல் , டுமீல் என்று வெடிக்கின்றன.

அந்தப் படகு
‘ஸரிகம’ வில் ஏறி
‘ஸ்நிதப’ வில் இறங்குகிறது

ஒருவன்
இன்னொருவனின் முகத்துக்கு நேரே
‘க’ வை நீட்டி
வசை மொழிகிறான்
‘ க’ வை அவ்வளவு
நெருக்கத்தில் கண்டவனின் கண்கள்
இரத்தமாகின்றன.

சப்தம் முடக்கப்பட்ட
கலவிப் படத்தில்
கவ்வி இழுத்து
மெல்ல
விடப்படும் கீழுதடு
‘ரி ‘ என்று ரீங்கரித்துவிடுகிறது

இரண்டு
‘ஸ’ க்கள்
இறுக அணைத்து கொண்டு
வெற்றியை
கூச்சலிட்டுக் கொண்டாடுவதைப் பார்க்கிறேன்

இசைப்பலகை
நெஞ்சிலேறிய பிறகு
உலகம் தாளமாகிறது

என்னைக் கொல்வதற்கு
கத்தியை உருவியபடி
வெறி கொண்டு ஓடிவரும்
கந்துவட்டிக்காரரே…!

பார்த்து ….பார்த்து
’ப ’ வுக்கும், ’ த ’ வுக்கும் இடையே
’த’ வுக்கும் , ‘ நி’ க்கும் இடையே
அய்யய்யோ…
ஒரே அபஸ்வரங்கள்

நாராசம்..!
நாராசம்…!


(நன்றி ; அகழ்)

Comments

Popular posts from this blog

கரகரப்பின் மதுரம்

நான் முறைப்படி இசை பயின்றவன் அல்ல. ஆயினும் பாடகன். பெயர் கூட  ‘இசை’. எவ்வளவு திமிர்? தமிழ்நாட்டில் எல்லோரும் பாடகர்தான். தன் வாழ்வில் ஒரு பாடலைக்கூட முணுமுணுத்திராத மனிதஉயிர்என்று எதுவும் இருக்காது. அதுவும் இளையராஜாவின் தேசத்தில் எல்லோரும்தான் பாட வேண்டும். எல்லோரும்தான் பறக்க வேண்டும். பாடல் என்பது கொஞ்சமாகப் பறப்பது. மனிதன் பாதசாரியானாலும் பறக்க விரும்புவன்தான். அவன் அத்தனை நெரிசல்களுக்கிடையே நடந்து நடந்து சலிப்பவன். எனவே சமயங்களில் அத்தனையையும் விட்டுவிட்டு அவன் பறக்கத்தான் வேண்டும்.  நான் பாத்ரூம் ஓட்டை வழியே பறந்து வானத்திற்குப் போய்விடுபவன். என்னை வானத்தில் ஏற்றிவிடும் அம்மையப்பன்  இளையராஜா. எனக்கு ராஜாவின் இசையைப் போலவே அவர் குரலும் அவ்வளவு பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கிறது என்பதுபற்றி இதுவரை யோசித்ததில்லை. ஆராய்ந்து பார்த்ததில்லை. ஆராயவும் தெரியாது.  ஆராயத்தெரியாதுஎன்பது அருவியின் முன் ஒரு சலுகை. குடைந்து குடைந்து நீராட வேண்டியதுதான்.   ராஜாவின் இசையைப் போற்றிப் புகழும் சிலருக்குக்கூட  அவர் குரல் உவப்பானதாய் இருப்பதில்லை. கொஞ்சம் இசை அறிந்த நண்பர் ஒ...

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302