Skip to main content

மூன்று கவிதைகள்


உனது லட்சணம்

இந்த முறை
“போகிறேன்..” என்பதை
அவ்வளவு திடமான குரலில் சொன்னாள்

போய்விடுவாள்தான் போல?

எழுந்தவள்
எட்டு வைத்து
நடக்கிறாள்

பின்னோக்கி…
பின்னோக்கி…

உச்சிவெயிலில்
மொட்டைப் பாறையில்
நன்றாகச்
சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு
ஆயுளுக்கும் அசையாத கதியில்
அங்கே என்னடி செய்து கொண்டிருக்கிறாய்?



காலிப்பொன்

கனத்த செல்வமென
கொஞ்ச காலம்
உன்னை என் கைகளில்
ஏந்தியிருந்தேன்.

இந்தக் கைகளில்..
இதே கைகளில்..

காலியாகிக் கிடக்கிற
இதே கைகளில்

இப்பவும்
இவைதான்
வெறுங்கைகள் ஆகுமோ ?

கனத்த செல்வம்
சுடர்ந்த கைகள்



இளம் இசை மாணவனின் புத்துலகு

நான்குமுனைச் சந்திப்பின் மூலையில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இப்படி
‘ரி’ யிலேயே
நின்று கொண்டிருப்பார்
அறிஞர் அண்ணா

விளையாட்டுச் சிறுவர்கள்
தூண்களுக்குப் பின்னே
மறைந்து கொண்டு
சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்
‘பதநி ‘
டுமீல் , டுமீல் என்று வெடிக்கின்றன.

அந்தப் படகு
‘ஸரிகம’ வில் ஏறி
‘ஸ்நிதப’ வில் இறங்குகிறது

ஒருவன்
இன்னொருவனின் முகத்துக்கு நேரே
‘க’ வை நீட்டி
வசை மொழிகிறான்
‘ க’ வை அவ்வளவு
நெருக்கத்தில் கண்டவனின் கண்கள்
இரத்தமாகின்றன.

சப்தம் முடக்கப்பட்ட
கலவிப் படத்தில்
கவ்வி இழுத்து
மெல்ல
விடப்படும் கீழுதடு
‘ரி ‘ என்று ரீங்கரித்துவிடுகிறது

இரண்டு
‘ஸ’ க்கள்
இறுக அணைத்து கொண்டு
வெற்றியை
கூச்சலிட்டுக் கொண்டாடுவதைப் பார்க்கிறேன்

இசைப்பலகை
நெஞ்சிலேறிய பிறகு
உலகம் தாளமாகிறது

என்னைக் கொல்வதற்கு
கத்தியை உருவியபடி
வெறி கொண்டு ஓடிவரும்
கந்துவட்டிக்காரரே…!

பார்த்து ….பார்த்து
’ப ’ வுக்கும், ’ த ’ வுக்கும் இடையே
’த’ வுக்கும் , ‘ நி’ க்கும் இடையே
அய்யய்யோ…
ஒரே அபஸ்வரங்கள்

நாராசம்..!
நாராசம்…!


(நன்றி ; அகழ்)

Comments

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.