Skip to main content

கவிதைகள்


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்- 1

அவனிடம் இருந்த துப்பாக்கி
சமயம் பார்த்து வெடிக்காமல் போனது.
அவன் அதை துடைத்து எண்ணையிட்டு
நன்றாகவே பராமரித்து வந்தான்.
இருந்தும் அது வெடிக்கவில்லை.
விசையை அழுத்திப் பார்த்தான்.
தோட்டாக்களை ஆராய்ந்தான்.
எல்லாம் சரியாகவே இருந்தது.
பிறகு அதை ஒரு துப்பாக்கி பழுதுபார்ப்பவனிடம்
கொண்டுபோய் கொடுத்தான்.
அவன் தீர பரிசோதித்துவிட்டு
எல்லாம் சரியாகவே இருக்கிறது
என்று திருப்பிக் கொடுத்தான்.
எல்லாம் சரியாக இருந்தும்
ஒரு துப்பாக்கி ஏன் வெடிக்கமாட்டேன் என்கிறது
என்றிவன் யோசித்த வேளையில்

பெருங்குரலில் ஒரு சிரிப்பொலி கேட்டது.


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-11


அதை நோக்கி சுட்டபடி
தொடர்ந்து முன்னேருங்கள்
என்றொரு ஆணை பிறந்தது.
சர்வ வல்லமை படைத்த அது

ஏதோ ஒரு மந்திரத்தை முணூமுணுத்தது.
துப்பாக்கிகள் ஒன்றையொன்று சுட்டுக் கொண்டன.

அது தொடர்ந்து முன்னேறியபடி இருக்கிறது.


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-111



அந்த ஊரில் எல்லோரும் அவரை
துப்பாக்கி சாமி என்றே அழைத்தனர்.
அடிக்கடி இரவுகளில் வீறிடும் குழந்தைகளுக்கு
அவர் தன் துப்பாக்கியிலிருந்து தாயத்துகள் செய்து தந்தார்.
ரவைகளை உருக்கி குளுகைகளையும் களிம்புகளையும்
தயாரித்தார்.
அவர் தன் பல்லாயிரம் கரங்களால்
பல்லாயிரம் மக்களின் கண்ணீரைத் துடைத்ததாகச் சொன்னார்கள்.
அவரிடம் எல்லா வினாக்களுக்கும் விடையிருப்பதாகவும்
சகல குழப்பங்களுக்கும் தெளிவிருப்பதாகவும் சொல்லப்பட்டதால்
நான் என் வினாவைத் தூக்கிக் கொண்டு அவரிடம் போனேன்.
அவர் தாள் பணிந்து அதைக் கேட்டேன்.
மறுபடியும் கேட்டேன்.
திரும்பவும் கேட்டேன்.
சாமி சில கேள்விகளுக்கு மட்டும் இப்படி
காது கேளாதது போல் நடிப்பார்
என்று ஏற்கனவே செவியுற்றிருந்ததால்
அவர் காதுக்குள் சென்று கேட்டேன்.
இவனை வெட்டி தோட்டத்தில் புதையுங்கள்
என்று கத்தினார்.



Comments

பூடகமாக சொல்லி இருக்கீங்க.. கொஞ்சமா எனக்குத் தெரிஞ்ச மாதிரி அர்த்தம் பண்ணிக்கிட்டேன் நண்பா..
என்ன சொல்ல ? அருமை.

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.