Skip to main content

கவிதைகள்


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்- 1

அவனிடம் இருந்த துப்பாக்கி
சமயம் பார்த்து வெடிக்காமல் போனது.
அவன் அதை துடைத்து எண்ணையிட்டு
நன்றாகவே பராமரித்து வந்தான்.
இருந்தும் அது வெடிக்கவில்லை.
விசையை அழுத்திப் பார்த்தான்.
தோட்டாக்களை ஆராய்ந்தான்.
எல்லாம் சரியாகவே இருந்தது.
பிறகு அதை ஒரு துப்பாக்கி பழுதுபார்ப்பவனிடம்
கொண்டுபோய் கொடுத்தான்.
அவன் தீர பரிசோதித்துவிட்டு
எல்லாம் சரியாகவே இருக்கிறது
என்று திருப்பிக் கொடுத்தான்.
எல்லாம் சரியாக இருந்தும்
ஒரு துப்பாக்கி ஏன் வெடிக்கமாட்டேன் என்கிறது
என்றிவன் யோசித்த வேளையில்

பெருங்குரலில் ஒரு சிரிப்பொலி கேட்டது.


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-11


அதை நோக்கி சுட்டபடி
தொடர்ந்து முன்னேருங்கள்
என்றொரு ஆணை பிறந்தது.
சர்வ வல்லமை படைத்த அது

ஏதோ ஒரு மந்திரத்தை முணூமுணுத்தது.
துப்பாக்கிகள் ஒன்றையொன்று சுட்டுக் கொண்டன.

அது தொடர்ந்து முன்னேறியபடி இருக்கிறது.


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-111



அந்த ஊரில் எல்லோரும் அவரை
துப்பாக்கி சாமி என்றே அழைத்தனர்.
அடிக்கடி இரவுகளில் வீறிடும் குழந்தைகளுக்கு
அவர் தன் துப்பாக்கியிலிருந்து தாயத்துகள் செய்து தந்தார்.
ரவைகளை உருக்கி குளுகைகளையும் களிம்புகளையும்
தயாரித்தார்.
அவர் தன் பல்லாயிரம் கரங்களால்
பல்லாயிரம் மக்களின் கண்ணீரைத் துடைத்ததாகச் சொன்னார்கள்.
அவரிடம் எல்லா வினாக்களுக்கும் விடையிருப்பதாகவும்
சகல குழப்பங்களுக்கும் தெளிவிருப்பதாகவும் சொல்லப்பட்டதால்
நான் என் வினாவைத் தூக்கிக் கொண்டு அவரிடம் போனேன்.
அவர் தாள் பணிந்து அதைக் கேட்டேன்.
மறுபடியும் கேட்டேன்.
திரும்பவும் கேட்டேன்.
சாமி சில கேள்விகளுக்கு மட்டும் இப்படி
காது கேளாதது போல் நடிப்பார்
என்று ஏற்கனவே செவியுற்றிருந்ததால்
அவர் காதுக்குள் சென்று கேட்டேன்.
இவனை வெட்டி தோட்டத்தில் புதையுங்கள்
என்று கத்தினார்.



Comments

பூடகமாக சொல்லி இருக்கீங்க.. கொஞ்சமா எனக்குத் தெரிஞ்ச மாதிரி அர்த்தம் பண்ணிக்கிட்டேன் நண்பா..
என்ன சொல்ல ? அருமை.

Popular posts from this blog

வெண்டை விரல்களுக்கெதிரான விடுதலைப்பாட்டு

  பி யானோ வகுப்பில் இன்று புதிய பாடம் என் மாஸ்டர் அதிகம் பேசமாட்டார் அவ்வப்போது முறைப்பார் இன்றோ மூன்றுமுறை முறைத்துவிட்டார் கடைசியில் என் கை பாடிவிட்டது  சமதளத்திலிருந்து சற்றே நீண்டு ‘ஷர்ப்’ பைத் தீண்டுகையில் என் விரல்களை நான் கண்டேன். ஆஹா…! என்னுடையதோ இவை… இத்தனை  ஜ்வலிப்போ இதற்கு… நீந்து மீனோ.. தாவு அணிலோ.. தெய்வம் என்று பெயர் பெற்ற மூடமே! என்னுடை விரல்களை என்னுடை  கண்களில் காட்ட 47 ஆண்டுகள்  வேண்டுமோ உமக்கு?

தோழர் !

          கடவுள் எனக்குச் செய்யும் ஒரே ஒரு உருப்படியான காரியம் அதிகாலையிலேயே என்னை எழுப்பி விட்டு விடுவதுதான் இளமிருளில் கொஞ்சமாய்த் திரியும் மனிதர்கள் ஒருவரோடொருவர் பரிவோடிருக்கிறார்கள் ஒருவரையொருவர் அன்பு செய்ய முயல்கிறார்கள் என்னைத் தூரத்தில் கண்டதுமே சர்க்கரை குறைவான, ஆற்றாத தேநீர் ஒன்றை தயாரிக்கத் துவங்கி விடுகிறார் கூன் விழுந்த அந்த டீ மாஸ்டர் நான் வரும் முன்பே என் வழக்கமான டேபிளில் டீ வந்து அமர்ந்திருக்கும். அதை ஒரு பூச்செண்டு என்று உணர்ந்த கொண்ட நாளில் அவருக்கே கேட்காதபடி கண்ணீரை மறைத்துக் கொண்டு அவரைத் " தோழர்! " என்றழைத்தேன்.

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...