Skip to main content

கவிதைகள்


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்- 1

அவனிடம் இருந்த துப்பாக்கி
சமயம் பார்த்து வெடிக்காமல் போனது.
அவன் அதை துடைத்து எண்ணையிட்டு
நன்றாகவே பராமரித்து வந்தான்.
இருந்தும் அது வெடிக்கவில்லை.
விசையை அழுத்திப் பார்த்தான்.
தோட்டாக்களை ஆராய்ந்தான்.
எல்லாம் சரியாகவே இருந்தது.
பிறகு அதை ஒரு துப்பாக்கி பழுதுபார்ப்பவனிடம்
கொண்டுபோய் கொடுத்தான்.
அவன் தீர பரிசோதித்துவிட்டு
எல்லாம் சரியாகவே இருக்கிறது
என்று திருப்பிக் கொடுத்தான்.
எல்லாம் சரியாக இருந்தும்
ஒரு துப்பாக்கி ஏன் வெடிக்கமாட்டேன் என்கிறது
என்றிவன் யோசித்த வேளையில்

பெருங்குரலில் ஒரு சிரிப்பொலி கேட்டது.


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-11


அதை நோக்கி சுட்டபடி
தொடர்ந்து முன்னேருங்கள்
என்றொரு ஆணை பிறந்தது.
சர்வ வல்லமை படைத்த அது

ஏதோ ஒரு மந்திரத்தை முணூமுணுத்தது.
துப்பாக்கிகள் ஒன்றையொன்று சுட்டுக் கொண்டன.

அது தொடர்ந்து முன்னேறியபடி இருக்கிறது.


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-111



அந்த ஊரில் எல்லோரும் அவரை
துப்பாக்கி சாமி என்றே அழைத்தனர்.
அடிக்கடி இரவுகளில் வீறிடும் குழந்தைகளுக்கு
அவர் தன் துப்பாக்கியிலிருந்து தாயத்துகள் செய்து தந்தார்.
ரவைகளை உருக்கி குளுகைகளையும் களிம்புகளையும்
தயாரித்தார்.
அவர் தன் பல்லாயிரம் கரங்களால்
பல்லாயிரம் மக்களின் கண்ணீரைத் துடைத்ததாகச் சொன்னார்கள்.
அவரிடம் எல்லா வினாக்களுக்கும் விடையிருப்பதாகவும்
சகல குழப்பங்களுக்கும் தெளிவிருப்பதாகவும் சொல்லப்பட்டதால்
நான் என் வினாவைத் தூக்கிக் கொண்டு அவரிடம் போனேன்.
அவர் தாள் பணிந்து அதைக் கேட்டேன்.
மறுபடியும் கேட்டேன்.
திரும்பவும் கேட்டேன்.
சாமி சில கேள்விகளுக்கு மட்டும் இப்படி
காது கேளாதது போல் நடிப்பார்
என்று ஏற்கனவே செவியுற்றிருந்ததால்
அவர் காதுக்குள் சென்று கேட்டேன்.
இவனை வெட்டி தோட்டத்தில் புதையுங்கள்
என்று கத்தினார்.



Comments

பூடகமாக சொல்லி இருக்கீங்க.. கொஞ்சமா எனக்குத் தெரிஞ்ச மாதிரி அர்த்தம் பண்ணிக்கிட்டேன் நண்பா..
என்ன சொல்ல ? அருமை.

Popular posts from this blog

பேய் பங்களா

வ சந்த மாளிகை என்பது காதலன் காதலிக்கோ காதலி காதலனுக்கோ கட்டி எழுப்பும் கட்டிடமல்ல காதல்,  மண்ணில் தோன்றுவதில்லை அதன் பிறப்பே வசந்தமாளிகையில்தான் அல்லது காதல் பிறந்த மறுகணமே மாளிகை  வான் அளாவ வளர்ந்துவிடுகிறது எழுப்பப்பட்ட மாளிகைகளில் எந்த மாளிகையும் தரைமட்டமாவதில்லை பூச்சுக்கள் உதிர்கின்றன ஆங்காங்கே புற்றுகள் வளர்கின்றன கோட்டான்கள் அலறுகின்றன எல்லா  இடிபாடுகளுக்கிடையேயும் நினைவுறுப் பேய்கள் அங்குமிங்குமாய் தாவிக் கொண்டிருக்கின்றன வாரத்தில்  ஒரு முறையேனும் நான் என் மாளிகை முன் அமர்ந்து நீண்ட சிகரெட்டைப் புகைப்பேன் ஒரு தீபாராதனை போல அந்தப் பேய்கள் வாழ்க என!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புதிய நூலின் இரு அத்தியாயங்கள்

   கம்பனின் காதல் கவிதைகள்            1. துயரச் சந்தனக் கிண்ணம் இராமனும், இலக்குவனும் சீதையைத் தேடிச் செல்கையில் கிட்கிந்தையில் உள்ள பம்பை என்கிற பொய்கையை அடைந்து அங்கு ஒரு நாள் தங்குகின்றனர். மலர்கள், பறவைகள், மீன்கள் என இயற்கை எழில் மிக்க பொய்கை அது. கன்னியர் கனி இதழ்ச்சுவை போல் ருசிப்பது. கம்பன் இந்தப் பொய்கையை ஒளியும் நறுமணமும் கூடிய சந்தனக் கிண்ணம் என்கிறான். “…ஒண்தளச் சேறு இடு பரணியின் திகழும் தேசது” (3723) அதன் எழில் இராமனுக்குச் சீதையின் எழிலை நினைவுறுத்தி வருத்துகிறது. அந்தப் பொய்கையில் காதலின் துயர நாடகங்கள் நிகழ்கின்றன. அரி மலர்ப் பங்கயத்து      அன்னம், எங்கணும், ‘புரிகுழல் புக்க இடம்      புகல்கிலாத யாம், திருமுகம் நோக்கலம்; இறந்து      தீர்தும்’ என்று, எரியினில் புகுவன எனத்      தோன்றும் ஈட்டது; ( 3715) அந்தப் பொய்கையில் உள்ள தாமரையில் அன்னங்கள் வாழ்கின்றன. அவ்வளவுதான் செய்தி. ஆனால் கம்பன் செக்கச் சிவந்த தாமரையை, பற்றி எரிய விடுகிறான். அதில் அன்னங்களை எரி புக வைக்கிறான்....