Skip to main content

கவிதை







டம்மி இசை



வீட்டிலிருந்து 15 நாட்கள்
விடுப்புவேண்டி இருப்பதால்
அமானுஷ்யத்தின் துணைகொண்டு
ஒரு “டம்மிஇசையை” உருவாக்கினேன்.
அதற்கு என் நடை உடை பாவனைகளை கற்பித்தேன்.
ஒரு அலைபேசியை கையளித்தேன்.
மனமுருக அதன் கரங்களைப் பற்றுதலால்
நன்றி பகன்று விடைபெற்றேன்.
மறுநாளே அழைத்த அது
என் மகனின் வீட்டுப்பாடங்கள்
ரொம்பவும் கடினமாக இருப்பதாக சொன்னது.
நாளுக்கு நாள் அதன் புகார்கள்
அதிகரித்துக் கொண்டே வந்தன.
புதிததாய் தனக்கு மூச்சுமுட்டும் வியாதி கண்டிருப்பதாகவும்
சீக்கிரம் வந்துவிடும் படியும்
அது நச்சரிக்கத்துவங்கியபோது
நானதனை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினேன்.
அமானுஷ்யக்காரரிடம் சொல்லி விடுவதாக மிரட்டினேன்.
பிறகு அதன் அழைப்புகள் நின்று விட்டன.
விடுமுறையின் ஏகாந்தம் முடியும் கடைசி நாளில்
என் வருகையைத் தெரிவிக்க
நான் அதை அழைக்க ,


ஒரு பெண் குரல் சொன்னது
“நீங்கள் தொடர்புகொள்ளும்
வாடிக்கையாளர்
பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கிறார்”


நன்றி; கல்குதிரை
.

Comments

ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு... நான் ரசிக்கும் இசையின் அருமையான கவிதை..
நடைமுறை வாழ்க்கையில் மனிதர்கள் படும்பாட்டை மிக யதார்த்தமாக கவிதையாக... வாழ்த்துகள் சகோ...
Thendral said…
Can't replace original Isai 😇. Literally laughed out loud

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.