Skip to main content

வாளோடும் வயலினோடும் அலைபவன்....

லிபி ஆரண்யாவின் “ தப்புகிறவன் குறித்த பாடல்’ --- - சாம்ராஜ்- தமிழில் அரசியல் கவிதை எழுதுபவர்கள் மிக குறைவு. இங்கு இயங்கும் “கவிதையின் அரசியல்” அரசியல் கவிதைகளுக்கு எதிரானது. இடதுசாரிகளிடமே எப்பொழுதும் ”அரசியல் கவிதை” எழுதும் பேதமைமிக்க பொறுப்பு ஓப்படைக்கபடும். அவர்களும் கோஷங்களின் பிரேத குழியில் வார்தைகளின் சவங்களை அள்ளி அள்ளி புதைப்பார்கள். பிறகு பிறகென்ன சவங்களில் முளைத்த சொற்கள் மயானமெங்கும் மரத்தில் தொங்கும் விக்கிரமாதித்யன் வேதாளமாய் மிக அரிதாக அந்த காட்டில் மலர் பூப்பதுண்டு. என்பதுகளின் நடுபகுதியில் நக்சல்பாரி இயக்கங்களின் வெகுசன பத்திரிக்கைகளில் அப்படி மலர்கள் பூத்தன. உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் கலைநேச பிரபு, புதிய ஜிவா, பாரதிபுத்திரன், நிஷா என. இவர்களில் மிக முக்கியமானவர் பாரதிபுத்திரன். ”மாரிக்கால இரவுகள்” என்று ஓரு தொகுப்பு மாத்திரமே அவருக்குண்டு. அதுவும் 95 பிறகு மறுபதிப்பு வராத தொகுப்பு. மிக அரிதான குரல் பாரதி புத்திரனுடையது. கோஷங்கள் இல்லா கோபம் அவருடையது .அவரின் உக்கிரம் ஓரு பொழுதும் கவிதைகளை கொன்றதில்லை. இங்கு கவிதைகளை கொன்று பழைய பிரிட்டிஷ் அதிகாரிகள் போல அவற்றின்மிது காலை தூக்கிவைத்து புகைபடம் எடுத்து கொள்ளும் அனேக கவிதை வீரப்பன்களை நாம் அறிவோம்.. பல பேரின் கவிதை தொகுப்புகளின் பின்னட்டையில் அவர்கள் புகைபடத்திற்கு கீழே இருப்பது கவிதைகளின் பிணங்களே. நீங்கள் ”வரிகளுக்கிடையே” வாசிப்பவராய் இருந்தால் நிச்சயம் தெரியும். 90 களின் பிற்பகுதியில் மா –லெ இயக்கங்கள் ஏக்கங்களாய் மாற பாட்ஷா ரஜினிகாந்தாய் பாரதிபுத்திரன் தன் கவிஞன் அடையாளத்தை துறந்து பேராசிரியர் பாலுச்சாமியாய் சிற்பங்களையும் ஓவியங்களை நோக்கி நடக்கத் துவங்கினார்.இன்றும் என்னை போன்ற கொஞ்ச பேர் ஞாபகங்களில் சுமந்து திரிகிறோம் அவரது மகத்தான கவிதைகளை .பிறகு அப்படியான குரலை கேட்கவேயில்லை. லேசாக ஓலிக்கும் அதுபோன்ற குரல்களை உடனடியாக கொல்வதற்கு நிறைய பேர் கள்ளிபாலோடு அலைந்தனர், அலைகின்றனர். பிடறி சிலிர்த்த சிலரை கூட்டிச் சென்று கிணற்றில் “சிங்கம்” காட்டிய கதைகள் அனேகம் உண்டு.அவர்களும் பரினாமவிதி அனுசரித்து ”கினற்றில் திமிங்கலமாய்” வாழ தொடங்கினர். இந்த சுழலில்தான்2010ல் நான் லிபியின் குரலை கேட்கிறேன். எறக்குறைய அது பாரதிபுத்திரனோடு இல்லாது போன குரலின் தொடர்ச்சியது. தனித்துவமிக்க அரிய குரல் அது. ஓன்று அழகியல் அல்லது அரசியல் பிரகடனம் இரண்டுக்கும் இடையே ஓரு நைந்த நூல் பாலம் கூட கட்ட முடியாது என்று துண்டை போட்டு தாண்டுபவர்களுக்கு மத்தியில் கனத்த இருப்புபாலத்தில் நிற்கிறார் லிபி. 37 கவிதைகள் 56 பக்கங்கள்.எந்திரன் சிட்டி போல ஸ்க் ஸ்க் வாசித்து விடலாம்தான். அது நீங்கள் சிட்டியாக இருக்கும் பட்சத்தில். மனிதனாக இருக்கும் பட்சத்தில் நிறைய நாளாகும் இவற்றிலிருந்து வெளியே வருவதற்கு. லிபி பூங்கா அல்ல. காலை எட்டு மணி முதல் மாலை எட்டு மணிவரை என போர்டு போட. அடர் காடு. இதில் மிக முக்கியம் இந்த அடர் காட்டில் உங்களை நீங்கள் கண்டுபிடிபிர்கள் அல்லது கண்டடைவீர்கள். பின்னிரவுகளின் துல்லியமாய் லிபியின் கவிதைகள் “சிக்கலற்று இந்த புறநகர் தன் நாளை துவங்குவதற்கு தன் தூக்கத்தை பலி கொடுக்கும் வாழை பழ வியாபாரி” “ மூட்டையோடு தூங்கும் மன நிலை பிறழ்ந்தவன்” ”எழாம் பீர் பாட்டிலுக்கு மேலே பொகும் மேசைகள்” ”போதையில் உதிர்ந்த சொற்க்ளை வழியெங்கும் தேடுபவன்” ”வெளியேறிய தவளைகள் அடிவயிற்றில் சபித்து நிற்க” பின்னிரவுகள் பிறழ்ந்தவர்க்ளுக்கு மாத்திரமல்ல, பிறழ போகிறவர்களுக்கும் தான். லிபி பின்னிரவுக்காரன் மட்டுமல்ல பின்நவினத்துவ ஆத்திசூடிக்காரனும் கூட. அவனால் தான் “கூரையின் கிழ் இருக்கும் சமரசமற்ற போராளியை”யும் சொல்ல முடியும், நீர் தைலத்தையும் வரைய முடியும், காலனி கிளைத் தோழரின் அரசியல் வகுப்பிலும் அமர முடியும். “புரட்சி பிடுங்கி போல் கதைத்து திரியும் எம்மை ஓரு பொழுதும் மன்னியாதீர்” என மன்றாட முடியும். “மஹாபலியாய் ஆகப்பெரும் மேசையில் உதிரியாய் தன்னை கிடத்திக் கொள்ள முடியும். ”அகண்ட பாரதத்தையும் குட்டை பாவாடையும்” ஒருங்கே பாடக்கூடியவன் அவன் ”அரும்பும் பல்காரன்தான் தேசத்தின் பாடலையும்” இசைக்கிறான்” ”கரசேவையும் தேவகுமாரனால் கூடாத காரியமும்” இங்கு ஓன்றே. “சிறுவர்களை பிடித்து செல்பவர்களையும், சில்லறை பொறுக்குபவர்களையும், ராமசந்திரன்களையும், கோடைகால எசமானனையும், குழந்தைகள் கழுத்தில் ஸ்டெத்தை மாட்டுபவர்களையும், தாமதிக்காது கொலை செய்ய வேண்டும்” என்கிறான் கவிஞன். கூடவே ”ஆட்டம் முடியவே காத்திருக்கிறோம்” என்றும் சொல்கிறான் 88ம் ஆண்டில் பாகிஸ்தான் மட்டைபந்து அணி இம்ரான்கான் தலைமையில் இந்தியாவிற்கு ஓரு தொடர் விளையாட வந்தது. அணியில் அப்துல் ஹாதீர் என்றொரு சுழல் பந்து வீச்சாளரும் உண்டு. அவருடைய பந்துவீசும் முறை அன்றைக்கு உலக பிரசித்தம்.. ஆடப்போகிறவருக்கு பக்கவாட்டிலிருந்து புறப்படுவார். அவர் புறப்படுவது எறக்குறைய ஆடப்போகிறவருக்கு பந்து வீச அல்ல என்பது போலவே இருக்கும். எல் வடிவத்தில் பயனப்பட்டு பந்து வீசுவார்.. எறக்குறைய லிபி கவிதை சொல்லும் முறையும் இத்தகையதே. எதிர்பாராத இடத்திலிருந்து .புறப்பட்டு சட்டென்று கோனம் மாறி நம்மை தகர்ப்பது லிபியின் வழக்கம்.. சமீப காலத்தில் இத்தனை அரசியல் தெளிவோடு, அழகியலோடு,, நுட்பத்தோடான கவிதை தொகுப்பை நான் வாசிக்கவில்லை. என். ஹெச் சாலை குறித்தும் லிபியால் கூரிய கவிதை எழுதமுடியும். அதன் ஓரத்திலிருந்து சுருட்டு குடிப்பவர்கள் குறைந்து வருகிறார்கள் என்றும் பேச முடியும். ஓரு கணக்கில் லிபியின் குரல் தனியானது. எதிர் குரலற்றது. இதனோடு சேர்ந்திசைக்க ஓருவரும் இல்லை. இந்த குரல்களினால் தான் காலகாலமாய் இடதுசாரிகள் பிரகடனக்காரர்கள் என்ற கறையை போக்க முடியும். அழகியலுண்டு என நிறுவ முடியும். நவின கவிகளின் சிம்மாசனத்திற்கெதிரே கால் கால் மேல் போட்டு அமர முடியும். அசலான அரசியல் கவிதைகளை முன்னெடுத்து செல்ல முடியும். நவின கவிதை என்ற பெயரில் பிறக்கும் நான் கடவுள் கதாபாத்திரங்களை கட்டுப்படுத்த இயலும். லிபி நீண்ட காலமாக எழுதி வருகிறார் கள்ளி பாலையும், கன்னி வெடிகளையும் தாண்டி விட்டார். இனி எந்த மீட்பரும் இவரை வழி மாற்ற முடியாது. மிக நிதானமாக தொகுப்பு கொண்டு வந்திருக்கிறார். நிச்சயமாய் பின் அட்டையில் தன் புகைப்படம் போட்டுக் கொள்ளவில்லை. காவிக் கோவணம். சொப்பனஸ்கலிதம் அகண்டபாரதம். என்றொரு கவிதை முடியும். லிபியின் மகத்தான வரிகளில் ஒன்றென இதை நான் கருதுகிறேன். காத்திரமான கவிதைகள் இன்னும் நிறைய நமக்கு இருக்கின்றன லிபியிடமிருந்து.

Comments

Anonymous said…
http://skkmcc.blogspot.in/2012/12/blog-post_7892.html

பாரதிபுத்திரனின் தம்பி-நான் ஏதுசெய்வேனடா.. நூலுக்காக..

Popular posts from this blog

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

  கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு  பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு  வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே  ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம்  எதுவென்றுரைத்தால்  அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே  வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...

நாணத்தை நடிக்க முடியுமா?

கபிலர் கவித்துவத்திரட்டு  தொடரில்  ' கலித்தொகை' பாடல்கள் துவங்கியுள்ளன. கபிலரின்  கவித்துவ உச்சங்கள் நிகழ்ந்துள்ள நூல் என்று கலித்தொகையைச் சொல்லலாம். வரிக்கு வரி அடிக்கோடிட வேண்டிய பல பாடல்களைக்  கொண்டது.  நாடகத்தன்மையின் சுவாரஸ்யம் நிரம்பியது.  இத்தொடரில்  இதுவரை வெளியான கட்டுரைகளில் இதுவே சிறந்தது என்பது என் எண்ணம். காரணம், கட்டுரையாளன் அல்ல, கவிஞன். "நாணத்தை நடிக்க முடியுமா?" இணைப்பு : https://akazhonline.com/?p=12972 https://akazhonline.com/?p=12972 நன்றி அகழ்!