எல்லாம் முடிந்துவிட்டது வாணிஸ்ரீ !
கொண்டை சுற்றுவதில் வல்லவரான கடவுள்
ராணி ஸ்ரீயையும், நீலிஸ்ரீயையும்
உன்னோடே கலந்துகட்டி
என் முன்னே அனுப்பினார்
அதில் எந்தக் கொண்டை உன் கொண்டை
என்றறிவதில்
பரிதாபமாகத் தோற்றுவிட்டேன் ...
எல்லாம் முடிந்துவிட்டது வாணிஸ்ரீ !
எவ்வளவு குடித்தாலும்
ஒழுங்காக வீடு சேர்ந்து விடுவேன்
லுங்கிவிலகி நான் ரோட்டோரம் கிடந்தது
ஒரே ஒரு நாள்தான் ...
சரியாக, மிகச்சரியாக
அன்று தான் உன் வீட்டில் தேங்காய்ச் சட்னி
தீர்ந்துவிட்ட பொட்டுக்கடலையை வாங்கி வர
நீ அண்ணாச்சி கடைக்கு வந்தாய்...
ஏன் வாணி உன் வீட்டில் அன்று தக்காளி சட்னியாக
இருந்திருக்க கூடாது ?
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !
அப்படி தக்காளிசட்னியாகவோ, கத்தரிக்காய் குழம்பாகவோ மட்டும்
இருந்திருந்தால்
இன்னேரம் நமது வசந்தத்து மாளிகையில்
இரண்டு “தேன்கள் ” ஓடியாடாதோ வாணிஸ்ரீ ?
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !
கொஞ்சம் குடித்தால்தான்
அந்த அறையின் கதவுகள் திறக்கின்றன
அங்குதான் அந்த வீணை இருக்கிறது
அங்குதான் நீயும் இருக்கிறாய்
நீ வாசிக்கக் கூட வேண்டாம் வாணிஸ்ரீ
வெறுமனே அது உன் தொடையில் இருந்தால் போதும் ...
இதையெல்லாம் கண் ஆரக் காணாமல்
கேவலம் ஈரலைப் போற்றி வாழ்வேனோ வாணிஸ்ரீ !
ஒரு முறை கூடத் தொட்டுப் பார்த்திடாத
அதனாலேயே
ஆயுள் முழுக்க தொட்டுதொட்டுப் பார்க்கும்
உன் காந்தள் மெல்விரல் கைகளால்
தினம் ஒரு குவளை வழங்கு ...
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !
நேற்று பல் மருத்துவரை கண்டு வந்தேன்
கடைப்பல்லை முற்றாக பூச்சி அரித்து விட்டதாம்...
இனி அடைக்கவே முடியாதென்றும்
பிடுங்கியே தீர வேண்டும் என்றும் சொல்லி விட்டார்
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !
ஒரு தொண்டுக்கிழம்
“ நான் தான் ஆனந்த் ...”
என்று முன் வந்து நின்றால்
ஊரார் எதில் நகுவார் வாணிஸ்ரீ ?
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !
Comments