Skip to main content

மாயா விநோதம்


                       

நிசப்தம் நிலவிய கணமொன்றில்
கொஞ்சம் சத்தமாகச் சொல்லிவிட்டேன்
" துரதிருஷ்டசாலிகள் பொதுவாக ஜூன் மாதத்தில்தான்
  பிறக்கிறார்கள்"
 பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்
 ஒரு கணம் அதிர்ந்துவிட்டு பிறகு சொன்னார்...
 " தவறு...ஏப்ரல் மாதத்தில்தான் பிறக்கிறார்கள்.."
 பெரிய நெற்றியை திருநீற்றால் நிறைத்திருந்த ஒரு பெரியவர் 
தூரத்திலிருந்து சத்தமிட்டுச் சொன்னார்..
" உறுதியாக , அது நவம்பர்தான்..."
 அப்போது அவர் கண்களில் பளிங்கு மின்னியது
  மோர் ஊற்ற வந்த சிப்பந்திச் சிறுவன்
" சார்..அது ஆகஸ்ட்.." என்று முணுமுணுத்தான்.
  கைகழுவி விட்டு என்னைக் கடந்து சென்ற இளநங்கையொருத்தி
" wrong, it's  march only "  என்று கிசுகிசுத்துவிட்டுப் போனாள்
எல்லா திசைகளிலிருந்தும் எதிர்க்குரல்கள் எழுந்தன
பில்லை வாங்கி கம்பியில் செருகி விட்டு
மிச்ச சில்லறைகளின் மீது அடித்துச் சொன்னார் முதலாளி..
" எல்லோரும் தவறாகச் சொல்கிறார்கள்...துரதிர்ஷடசாலிகள் எப்போதும் மே மாதத்தில்தான் பிறந்து தொலைக்கிறார்கள்..."
பன்னிரண்டு மாதங்களும் தீர்ந்து விட்டன.
எனது குழப்பம் என்னவெனில்
இல்லாத ஒரு மாதத்தில் பிறந்து
எப்படி நைஸாக பூமிக்குள் நுழைந்து விடுகிறார்கள்
இந்த அதிர்ஷசாலிகள் என்பதுதான்.






 






Comments

karur karthik said…
மாய எதார்த்தம்

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...