அண்டைவீட்டு மனிதன் பால்கனியில் கையில் அழகான காபி கோப்பையை ஏந்தியபடி ஷோக்காக அமர்ந்து கொண்டு ஒரு புத்தகத்துள் ஆழ்ந்திருந்தான். நான் அனிருத்தை இன்னும் கொஞ்சம் அலறவிட்டேன். அவன் முகந்திரிந்து கோணுவதைக் கண்டேன். கோணிய முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சட்டென மலர்ந்துவிட்டது. கைகள் ஆனந்தித்து தாளமிட்டன. இவ்வளவுதான் சத்தம் இதற்குமேல் திருகினால் குழாய் உடைந்துவிடும். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நண்பனொருன் என் திருமணப்பரிசாக வழங்கிய அந்த தடித்த புத்தகத்தை எடுத்துவந்து ஆக்ரோஷமாக வாசிக்கத் துவங்கிவிட்டேன். |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments