Skip to main content

அன்புள்ள சாம்ராஜிற்கு - வரதராஜன் ராஜு



சாம், நேற்று சட்டென்று பேச வரவில்லை. ஆனால் பேசியிருக்க வேண்டும். விஜியைப் போல நல்ல வார்த்தை ஒன்றாவது நான் சொல்லியிருக்க வேண்டும். அந்தச் சொல்லுக்காகவும் அது தந்த தூண்டுதலுக்காகவும் விஜிக்கு எனது நன்றி.

உங்களுக்கும் சரோவிற்கும் மணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் அதை மண வாழ்வு என்று சொல்ல மாட்டீர்கள். அதனாலென்ன. குழந்தைகள், அவர்களை வளர்ப்பதற்கான ஒரு கூரை, அதைச் சாதிக்கும் பொருட்டான ஒரு பொருளியல் செயல்பாடு என்ற ஒன்றை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளலாம்.



இந்த ஆறு வருடத்தில், முதல் இரண்டு வருடங்கள் உங்கள் இருவருக்கும் அலைக்கழிப்பான நாட்கள். ஆரண்யா வந்த பிறகான நான்கு வருடங்களே நீங்கள் ஒரே கூரையின் கீழ் அமைந்தீர்கள். அது பெசண்ட் நகர் வீடு என்றழைக்கப்பட்டது. நண்பர்களுக்கிடையில் சுருக்கமாக 'பெசண்ட் நகர்' என்றே அழைக்கப்பட்டது. ஒரு நான்கு வருடங்களில் அந்த வீடு ஒரு பெரிய சாப்பாட்டு மேசையென்றாகிவிட்டிருக்கிறது. நான் சிறு வயதிலிருந்தே பெருங்கூட்டமாக உணவருந்திப் பழக்கப் பட்டவன். சிறு வயதில் வீடு ஆளும் பேருமாக இருக்கும். உங்களுக்குத் தெரியும் வீட்டாட்களே எப்பொழுதும் பத்து பேரிருப்பார்கள். அதனாலேயெ பெரிய சாப்பாட்டு வட்டங்கள் எனக்கு ஒரு மேடையெனப் பழகிவிட்டன. அங்கே நீங்கள் உழப்பும் ஒரு குழந்தையை, ஒரு கள்ளனை, பேராசைக்காரனை, ஒரு கோமாளியை, கருணை மிக்க ஒரு கொடையாளியை, ஒரு துறவியைக் காணமுடியும். மேசை விரிய விரிய அதன் சாத்தியப்பாடுகளும் கூடும்.முந்தைய தலைமுறைபோல எதிர்காலப் பொருளியல் திட்டங்களை ஒரு மதம் என ஒழுகாத மனமே இதைச் சாத்தியமாக்கும். இன்றைய சிறுகுடும்பப் பொருளியலில் இதை ஊதாரித்தனம் என்று சொல்லிவிடலாம். எனது பெற்றோரிடம் இந்தப் பண்புகளைப் பார்த்திருக்கிறேன்.



நீங்கள் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து நான் பெற்ற நட்புகளை நினைத்துப் பார்க்கிறேன். லிபி, ஷங்கர், இசை, கவின், சாம்சன் என்று அது நீளுகிறது. அவையெல்லாம் மேற்படி சாப்பாட்டு மேசையில் கிடைத்தவைதாம். பெசண்ட் நகரை ஒரு சாப்பாட்டு மேசை என்று அழைக்கலாம்.
அந்த சாப்பாட்டு மேசையை ஒரு தொடரோட்டமாக ஆக்கியதில் உங்களுக்கு இருக்கும் பங்கிற்கு நிகரானது சரோவினுடையது. ஆளும் பேருமாக இருப்பதில் நீங்கள் இருவருமே மகிழ்பவர்கள். அது எவ்வளவு தற்காலிகமானதென்று தெரிந்தாலும் குழந்தைகளைப் போல அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டே இருப்பீர்கள். சிறு வயதில் நித்திலா வீட்டுக்கு வருபவர்களில் அவளுக்கு பிடித்தமானவர்களிடம், ‘நீங்க எப்ப போவீங்க?’ என்று கேட்பாள். தனக்குக் கிடைத்திருக்கும் விளையாட்டு பீரியட் எவ்வளவு நேரம் என்று அவள் கணக்கிடும் முறைமை அது.


கடந்த முறை சரோ மதுரை வந்த போது நித்திலாவுக்குக் கொடுத்த ’கேக் சட்டியை’ அவள் பக்கத்து வீட்டிலிருக்கும் உத்தரப் பிரதேச இளைஞிக்குக் கொடுத்து இருவரும் சேர்ந்து, நல்ல மணத்துடன் ’ஓரியோ’ கேக் செய்தனர். நீங்கள் புத்தகங்களைக் கொடுப்பவரென்றால் சரோ சோற்றுச் சட்டியைக் கொடுப்பவர். இப்போது டெஸ்ஸா வந்து நீங்கள் வீடு மாறிவிட்டீர்கள். ஆனாலும் சாப்பாட்டு மேசை பெசண்ட் நகரில்தான் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...