Skip to main content

அன்புள்ள சாம்ராஜிற்கு - வரதராஜன் ராஜு



சாம், நேற்று சட்டென்று பேச வரவில்லை. ஆனால் பேசியிருக்க வேண்டும். விஜியைப் போல நல்ல வார்த்தை ஒன்றாவது நான் சொல்லியிருக்க வேண்டும். அந்தச் சொல்லுக்காகவும் அது தந்த தூண்டுதலுக்காகவும் விஜிக்கு எனது நன்றி.

உங்களுக்கும் சரோவிற்கும் மணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் அதை மண வாழ்வு என்று சொல்ல மாட்டீர்கள். அதனாலென்ன. குழந்தைகள், அவர்களை வளர்ப்பதற்கான ஒரு கூரை, அதைச் சாதிக்கும் பொருட்டான ஒரு பொருளியல் செயல்பாடு என்ற ஒன்றை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளலாம்.



இந்த ஆறு வருடத்தில், முதல் இரண்டு வருடங்கள் உங்கள் இருவருக்கும் அலைக்கழிப்பான நாட்கள். ஆரண்யா வந்த பிறகான நான்கு வருடங்களே நீங்கள் ஒரே கூரையின் கீழ் அமைந்தீர்கள். அது பெசண்ட் நகர் வீடு என்றழைக்கப்பட்டது. நண்பர்களுக்கிடையில் சுருக்கமாக 'பெசண்ட் நகர்' என்றே அழைக்கப்பட்டது. ஒரு நான்கு வருடங்களில் அந்த வீடு ஒரு பெரிய சாப்பாட்டு மேசையென்றாகிவிட்டிருக்கிறது. நான் சிறு வயதிலிருந்தே பெருங்கூட்டமாக உணவருந்திப் பழக்கப் பட்டவன். சிறு வயதில் வீடு ஆளும் பேருமாக இருக்கும். உங்களுக்குத் தெரியும் வீட்டாட்களே எப்பொழுதும் பத்து பேரிருப்பார்கள். அதனாலேயெ பெரிய சாப்பாட்டு வட்டங்கள் எனக்கு ஒரு மேடையெனப் பழகிவிட்டன. அங்கே நீங்கள் உழப்பும் ஒரு குழந்தையை, ஒரு கள்ளனை, பேராசைக்காரனை, ஒரு கோமாளியை, கருணை மிக்க ஒரு கொடையாளியை, ஒரு துறவியைக் காணமுடியும். மேசை விரிய விரிய அதன் சாத்தியப்பாடுகளும் கூடும்.முந்தைய தலைமுறைபோல எதிர்காலப் பொருளியல் திட்டங்களை ஒரு மதம் என ஒழுகாத மனமே இதைச் சாத்தியமாக்கும். இன்றைய சிறுகுடும்பப் பொருளியலில் இதை ஊதாரித்தனம் என்று சொல்லிவிடலாம். எனது பெற்றோரிடம் இந்தப் பண்புகளைப் பார்த்திருக்கிறேன்.



நீங்கள் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து நான் பெற்ற நட்புகளை நினைத்துப் பார்க்கிறேன். லிபி, ஷங்கர், இசை, கவின், சாம்சன் என்று அது நீளுகிறது. அவையெல்லாம் மேற்படி சாப்பாட்டு மேசையில் கிடைத்தவைதாம். பெசண்ட் நகரை ஒரு சாப்பாட்டு மேசை என்று அழைக்கலாம்.
அந்த சாப்பாட்டு மேசையை ஒரு தொடரோட்டமாக ஆக்கியதில் உங்களுக்கு இருக்கும் பங்கிற்கு நிகரானது சரோவினுடையது. ஆளும் பேருமாக இருப்பதில் நீங்கள் இருவருமே மகிழ்பவர்கள். அது எவ்வளவு தற்காலிகமானதென்று தெரிந்தாலும் குழந்தைகளைப் போல அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டே இருப்பீர்கள். சிறு வயதில் நித்திலா வீட்டுக்கு வருபவர்களில் அவளுக்கு பிடித்தமானவர்களிடம், ‘நீங்க எப்ப போவீங்க?’ என்று கேட்பாள். தனக்குக் கிடைத்திருக்கும் விளையாட்டு பீரியட் எவ்வளவு நேரம் என்று அவள் கணக்கிடும் முறைமை அது.


கடந்த முறை சரோ மதுரை வந்த போது நித்திலாவுக்குக் கொடுத்த ’கேக் சட்டியை’ அவள் பக்கத்து வீட்டிலிருக்கும் உத்தரப் பிரதேச இளைஞிக்குக் கொடுத்து இருவரும் சேர்ந்து, நல்ல மணத்துடன் ’ஓரியோ’ கேக் செய்தனர். நீங்கள் புத்தகங்களைக் கொடுப்பவரென்றால் சரோ சோற்றுச் சட்டியைக் கொடுப்பவர். இப்போது டெஸ்ஸா வந்து நீங்கள் வீடு மாறிவிட்டீர்கள். ஆனாலும் சாப்பாட்டு மேசை பெசண்ட் நகரில்தான் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...