கெடாமீசை தடியனொருவன்
குழந்தையின் கழுத்தைத் திருகப் பார்த்தான் தூண்களைப் போன்ற கால்களுக்கிடையில் புகுந்து அது தப்பியோடியது. தடியன் துரத்திக் கொண்டோடினான். பொந்து போன்ற மறைவிடத்தில் குழந்தை சுருண்டு ஒளிந்து கொண்டது. தடியன் இப்போது தோல்வியில் உறுமும் வெறிமூண்ட விலங்கு. அளந்து வைத்தது போன்ற கச்சிதமான பொந்து குழந்தையைக் காத்தருளி விட்டது. பெரிய ஆபத்து நீங்க இருந்த தருணத்தில் பொடிக்கல் ஒன்றை எடுத்து தடியனின் பிடரிமேல் எறிகிறது குழந்தை. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments