நெஞ்சே! இனிய கற்பனைகளை நிறுத்தாதே. நீ பார்த்துத் தீராத உன் சமாதிகளில் ஏதேனும் ஒன்றில் மல்லாந்து படுத்தபடியே அடுத்த கற்பனையைக் கட்டு பலூனில் காற்றை ஊதுவது போல் உன் நெஞ்சில் வாய் வைத்து ஊது. "மனிதன் அப்பத்தால் மட்டுமே வாழ்ந்து விடுவதில்லை" அவனால் வானத்தில் பறக்காமல் பூமியில் நடக்க இயலாது. பாட்டி வடை சுடுவதை நிறுத்திவிட்டால் நிலவு வெடித்துவிடும் ஊட்டு! அன்னை ஊட்டுவது போல் உனக்கு நீயே உருட்டு உருட்டி ஊட்டு! |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments