நெஞ்சே! இனிய கற்பனைகளை நிறுத்தாதே. நீ பார்த்துத் தீராத உன் சமாதிகளில் ஏதேனும் ஒன்றில் மல்லாந்து படுத்தபடியே அடுத்த கற்பனையைக் கட்டு பலூனில் காற்றை ஊதுவது போல் உன் நெஞ்சில் வாய் வைத்து ஊது. "மனிதன் அப்பத்தால் மட்டுமே வாழ்ந்து விடுவதில்லை" அவனால் வானத்தில் பறக்காமல் பூமியில் நடக்க இயலாது. பாட்டி வடை சுடுவதை நிறுத்திவிட்டால் நிலவு வெடித்துவிடும் ஊட்டு! அன்னை ஊட்டுவது போல் உனக்கு நீயே உருட்டு உருட்டி ஊட்டு! |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments