1. தாவாங்கட்டையில் அணிந்திருக்கும் நைந்த மாஸ்க்கோடு அந்த சின்ன கிராமத்திற்குள் நுழைகிறான் கிளி ஜோசியக்காரன் முதல் தெருவில் ஒரு பிணம் விழுந்துள்ளது "தளபதி சக்திவேல்" காலமாகிவிட்டார். கெத்தாக வாழ்வதற்கு கெத்தான பெயர் அவசியம்தான். நேற்று தளபதியும் சக்திவேலும் மடிந்துவிட்டனர். கிளி ஜோசியக்காரன் யாரையும் அதிர்ஷ்டம் பார்க்க அழைக்க வில்லை. கிளி அழைக்கிறது. அவன் அதை அதட்டி அடக்குகிறான். இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்த தெருக்களிலும் அவன் யாரையம் அழைக்கவில்லை. கிளி அழைத்தது அவன் அதட்டினான். 9 வது தெருவில் அவன் அழைக்கவில்லை அதுவும் அழைக்கவில்லை. கிளிக்கு என்னவோ புரிந்துவிட்டது. ஆனால் எதுவும் புரியவில்லை. 2.
வெயில் அள்ளிக் கொட்டியது. ஒரு மாடிவீட்டு நிழலில் நின்று பீடியைப் பற்றவைத்தான் கிளி ஜோசியக்காரன். கிளி ஜோசியம் ஒரு விளையாட்டாகி காலங்கள் ஆகிவிட்டன அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவனுக்கு இதுபோல் விளையாட்டாகத்தான் ஏதாவது செய்ய வரும்.
|
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments