கம்பளி போய்விட்டது ஆண்டாள் போய் விட்டாள் ஆயர்பாடி போய் விட்டது காய்ச்சலும் இருமலும் போய் விட்டன. கூம்பு ஹாரன்கள் போய் விட்டன. 'நாய்க்கூட்டம்' போய் விட்டது. குளிர் காய்ச்சிய தேநீர் போய்விட்டது விக்ஸ்புட்டிக்குள் ஒளிந்திருக்கும் காமம் காணாமல் போய் விட்டது உள்ளங்கைகள் ஒன்றோடொன்று உரசும் காட்சிகள் போய் விட்டன உதட்டு வெடிப்புகள் போய் விட்டன. ஓயாத பொங்கல் மணம் ஓய்ந்து போய் விட்டது. மாட்டுத்தொழுவத்து லீலி மலர் போய் விட்டது. முற்றத்துக் கோலங்கள் போய் விட்டன. அதனோடே போய்விட்டன குதிகால் பிறைகளும். நீர்த்துளிகள் மொய்க்கும் விரிநறுங்குழலிர் ஐயோ...! போயே விட்டனர். இவை போல் இன்னும் பல பரிவாரங்கள் உனக்கு இத்தனையும் கூட்டிக் கொண்டு எங்குபோய் மறைந்தாய் மார்கழி? |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".
Comments