நேற்று மேலும் ஒரு பொன்மொழியை உண்டேன். அது என் அறிவை அகண்டமாக்கியது எலும்பை இரும்பாக்கியது. பொன்னாக மாறிவிடத் துடிதுடிக்கும் மனிதர்களில் நானும் ஒருவன் என்பதால் விடாது பொன்மொழிகளில் மூழ்கி வருகிறேன். அவை ஒருவன் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் வல்லமை மிக்கவை என்பதால் புரண்டுவிழத் தயார் நிலையில் அமர்ந்தே வாசிக்கிறேன். ஆயினும் இரும்புகள் மீண்டும் எலும்பாகும் மர்மம் எங்குதான் நிகழ்கிறது? வாழ்வு முழுக்க கூடவே வருவேன் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்த காதலியின் திருமண ஆல்பம் போல் புன்னகைக்கின்றன இந்தப் பொன்மொழிகள். உணவை உண்டால் அது கொஞ்சம் சக்தியாகும் கொஞ்சம் வெளியேறும் அள்ளி அள்ளி நான் உண்ட பொன்மொழிகள் அத்தனைக்கும் என்ன ஆகிறதோ? ஏது ஆகிறதோ? |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments