Skip to main content

ஒரு மர்மக்கதை

 




நேற்று

மேலும் ஒரு பொன்மொழியை

உண்டேன்.


அது

என் அறிவை அகண்டமாக்கியது

எலும்பை இரும்பாக்கியது.


பொன்னாக மாறிவிடத்

துடிதுடிக்கும் மனிதர்களில்

நானும் ஒருவன் என்பதால்

விடாது

பொன்மொழிகளில் மூழ்கி  வருகிறேன்.


அவை

ஒருவன் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும்

வல்லமை மிக்கவை என்பதால்

புரண்டுவிழத் தயார் நிலையில்

அமர்ந்தே வாசிக்கிறேன்.


ஆயினும்

இரும்புகள் மீண்டும் எலும்பாகும் மர்மம்

எங்குதான் நிகழ்கிறது? 


வாழ்வு முழுக்க கூடவே வருவேன் என்று

தலையில் அடித்துச் சத்தியம் செய்த காதலியின்

திருமண ஆல்பம் போல்

புன்னகைக்கின்றன 

இந்தப் பொன்மொழிகள்.


உணவை உண்டால்

அது

கொஞ்சம் சக்தியாகும்

கொஞ்சம் வெளியேறும்


அள்ளி அள்ளி

நான் உண்ட 

பொன்மொழிகள் அத்தனைக்கும்

என்ன ஆகிறதோ?

ஏது ஆகிறதோ?




Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...