நேற்று மேலும் ஒரு பொன்மொழியை உண்டேன். அது என் அறிவை அகண்டமாக்கியது எலும்பை இரும்பாக்கியது. பொன்னாக மாறிவிடத் துடிதுடிக்கும் மனிதர்களில் நானும் ஒருவன் என்பதால் விடாது பொன்மொழிகளில் மூழ்கி வருகிறேன். அவை ஒருவன் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் வல்லமை மிக்கவை என்பதால் புரண்டுவிழத் தயார் நிலையில் அமர்ந்தே வாசிக்கிறேன். ஆயினும் இரும்புகள் மீண்டும் எலும்பாகும் மர்மம் எங்குதான் நிகழ்கிறது? வாழ்வு முழுக்க கூடவே வருவேன் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்த காதலியின் திருமண ஆல்பம் போல் புன்னகைக்கின்றன இந்தப் பொன்மொழிகள். உணவை உண்டால் அது கொஞ்சம் சக்தியாகும் கொஞ்சம் வெளியேறும் அள்ளி அள்ளி நான் உண்ட பொன்மொழிகள் அத்தனைக்கும் என்ன ஆகிறதோ? ஏது ஆகிறதோ? |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."
Comments