நேற்று மேலும் ஒரு பொன்மொழியை உண்டேன். அது என் அறிவை அகண்டமாக்கியது எலும்பை இரும்பாக்கியது. பொன்னாக மாறிவிடத் துடிதுடிக்கும் மனிதர்களில் நானும் ஒருவன் என்பதால் விடாது பொன்மொழிகளில் மூழ்கி வருகிறேன். அவை ஒருவன் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் வல்லமை மிக்கவை என்பதால் புரண்டுவிழத் தயார் நிலையில் அமர்ந்தே வாசிக்கிறேன். ஆயினும் இரும்புகள் மீண்டும் எலும்பாகும் மர்மம் எங்குதான் நிகழ்கிறது? வாழ்வு முழுக்க கூடவே வருவேன் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்த காதலியின் திருமண ஆல்பம் போல் புன்னகைக்கின்றன இந்தப் பொன்மொழிகள். உணவை உண்டால் அது கொஞ்சம் சக்தியாகும் கொஞ்சம் வெளியேறும் அள்ளி அள்ளி நான் உண்ட பொன்மொழிகள் அத்தனைக்கும் என்ன ஆகிறதோ? ஏது ஆகிறதோ? |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!
Comments