திடீரெனக் கண்டேன் சுவரில் மிதக்கும் ஒரு ஒளிக்குழம்பை. ஆனந்தக் குழப்பத்துள் தலைகுப்புற வீழ்ந்தேன். சேறும் சகதியும் ஊரும் புழுவும் மொய்க்கும் ஈயும் மல்லாந்து கிடக்கும் ஒரு பல்லியின் சடலமும் சேர்ந்த ஒரு சிறு குட்டையில் எங்கிருந்தோ வந்த ஒரு சூரியக் கதிர் பட்டுத் தெறிக்கிறது. சுவரிலோ சேரில்லை சகதியில்லை பல்லியின் சடலமும் இல்லை தெரிவதெல்லாம் முழு ஒளித் தளும்பல். பள்ளிப் பிராயத்தின் அறிவியல் வகுப்பில் ஒளிச்சிதறல், பிரதிபலிப்பு, எதிரொளிப்பு என்றெல்லாம் சொல்லப்பட்டனவே அவையல்ல இந்த நடுவயதில் கன்னத்தில் கைகூட்டி நெடுநேரம் இப்போது நான் கண்டு கொண்டிருப்பது |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments