திடீரெனக் கண்டேன் சுவரில் மிதக்கும் ஒரு ஒளிக்குழம்பை. ஆனந்தக் குழப்பத்துள் தலைகுப்புற வீழ்ந்தேன். சேறும் சகதியும் ஊரும் புழுவும் மொய்க்கும் ஈயும் மல்லாந்து கிடக்கும் ஒரு பல்லியின் சடலமும் சேர்ந்த ஒரு சிறு குட்டையில் எங்கிருந்தோ வந்த ஒரு சூரியக் கதிர் பட்டுத் தெறிக்கிறது. சுவரிலோ சேரில்லை சகதியில்லை பல்லியின் சடலமும் இல்லை தெரிவதெல்லாம் முழு ஒளித் தளும்பல். பள்ளிப் பிராயத்தின் அறிவியல் வகுப்பில் ஒளிச்சிதறல், பிரதிபலிப்பு, எதிரொளிப்பு என்றெல்லாம் சொல்லப்பட்டனவே அவையல்ல இந்த நடுவயதில் கன்னத்தில் கைகூட்டி நெடுநேரம் இப்போது நான் கண்டு கொண்டிருப்பது |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments