பிச்சைக்காரனுக்கும் இளம் பைத்தியத்திற்கும் இடையில் இருந்தான் அந்தச் சிறுவன். அர்த்தங்கள் அவசியப்படாதவன் என்பதால் சொற்களற்ற சத்தங்களால் கூவிக் கொண்டிருந்தான். பிச்சைக்காரனோ பைத்தியமோ இப்போது அவன் காலடியில் வந்து நிற்கிறது ஒரு நாய்க்குட்டி அதுவரை தொங்கிக் கொண்டிருந்த கையைத் தூக்கி அதுவரை அழுக்கில் ஊறிய இடுப்பில் கூட்டி சாய்ந்த கோணத்தில் ஒரு நோக்கு நோக்குகிறான். பிச்சைக்காரனிலிருந்து பைத்தியத்திற்குப் போகும் வழியில் நீர் எங்கு வந்தீர் மகாராஜா! |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments