Skip to main content

இசை கவிதைகள்



ஒருமையை உழுகையில் முதல் போகம் விளைகிறது

மரியாதை
மிகவும் மரியாதையானது

உயர்தரத்து வாசனை திரவியம்
பட்டுச் சரிகையின் டாலடிப்பு
வானளாவிய கட் அவுட்
கீழ்படிதலுள்ள மாணவனின் விண்ணப்பம்

காதலோ
சேற்றுப் பன்றிகளின் கும்மாளம்
ஒருவர் மீது ஒருவர் ஏறிப்படுக்கும்
இட நெருக்கடி

மரியாதையின்
பாதுகாப்பான இடைவெளியிலிருந்து
காதலின் கட்டற்ற களிப்பிற்கு
மெல்ல
அழைத்துச் செல்கிறது
ஒருமை

‘டா’ வும், ‘டி’ யும்
முதன்முறை
மூக்குரசிக் கொள்கையில்
சடசடத்ததெதுவோ
அதைத் தேடித்தான்
படுக்கையைக் கிளறுகின்றன
இரண்டு அம்மண உடல்கள்.


000


பார்த்திருத்தல்


“வானத்தை அண்ணாந்து பார்க்கையில் மனிதன் ஏன் அவ்வளவு விடுதலையடைகிறான்?”

என்று கேட்டான் ஒரு நண்பன்.

அந்தக் கேள்விக்கு
விரிவாக விடையளிக்கும் தோரணையில்

நானும்
அண்ணாந்து பார்த்தேன் வானத்தை

அவன்
பதிலறிவதற்காகக் கேட்கவில்லை.

நானும்
பதிலளிப்பதற்காக பார்க்கவில்லை

000



‘ஆலாப்’பில் மிதக்கும் அலுவலகம்


எவனோ ஒருவன்
காற்றில்
ஒரு ‘ஆலாப்’பை ஏற்றி விட்டிருக்கிறான்

அது
ஒரு அரசு அலுவலகத்துள் நுழைகிறது

கோப்புகள் கலைகின்றன
தாள்கள் படபடக்கின்றன

நிலம் குலுங்குகிறது
ஒருவரும் அலறவில்லை

கண்ணாடிகள்
உடைந்து நொறுங்கியதில்
பூக்கள் சிதறிக் கிடக்கின்றன

அசையாத உறுதியால்
சபிக்கப்பட்டிருந்த
படிக்கட்டுகள்
எழுந்து பறக்கின்றன

நாற்காலியின்
ஒரு கால் உடைந்து
தலைகுப்புறச் சாயும் ஒருவன்
தெய்வத்தின் மடியில்
சரிகிறான்

அதோ அந்த
இளநிலை நிர்வாக அலுவலர்
இதற்கு முன்பும்
எத்தனையோ முறைகள்
அழுது தீர்த்தவர்தான்

ஆனால்

ஏன் அழுகிறோம்
என்பதே அறியாமல்
அவர்
இப்படி அழுவது
இதுவே முதன்முறை.


நன்றி : அகழ் 

https://akazhonline.com/?p=9782


Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...