Skip to main content

பெருமாள்முருகன்- 60 : அய்யா வழியில் ஒரு ரகசிய உறுப்பினன்



பெருமாள்முருகனை முதன்முதலில் பார்த்தது சேலம் மணல்வீடு இதழ் சார்பாக நடந்த கூத்துப் பார்க்கப் போன இடத்தில் என்பதாக நினைவு. அப்போது எனது முதல் கவிதைத் தொகுப்பான “உறுமீன்களற்ற நதி” வந்திருந்தது. பார்த்த அன்றே ஒரு நிகழ்விற்கு அழைப்பு விடுத்தார். ஆனந்த், குவளைக் கண்ணன், நஞ்சுண்டன், மரகதமணி ஆகியோருடன் நானும் இளங்கோவும் அவரது ஏற்பாட்டில் சேலத்தை ஒட்டியுள்ள ஒரு கல்லூரியில் நடந்த இலக்கிய நிகழ்வில் கலந்த கொண்டோம். அநேகமாக நான் வெளியூரில் கவிஞன் என்கிற அறிமுகத்துடன் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி அதுவாகத்தான் இருக்கும். கவிதையின் மூலம் சம்பாதித்த சின்னத் தொகையும் அன்று அடைந்ததுதான்.

வாசகனுக்கு சில புத்தகங்கள் அவனுடைய புத்தகங்களாகவே ஆகிவிடும். “ நீராலானது”வும் “தனிமையின் வழி” யும் அப்படி என் புத்தகங்கள் ஆகிவிட்டவை. இவற்றுடன் இன்னொரு புத்தகத்தையும் சேர்க்க வேண்டும் ,அது பெருமாள் முருகனின் “வான்குருவியின் கூடு”. என் பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்தின் குறிப்பிடத்தக்க தொடக்கப்புள்ளி என்று அந்த நூலைச் சொல்வேன். அதிகமும் தனிப்பாடல்கள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல். இப்படியாக என் பழந்தமிழ் இலக்கிய வாசிப்பு தனிப்பாடல்களிலிருந்தே துவங்கியது. இது ஒரு நல்லூழ் என்றே இப்போது உணர்கிறேன். கோவை விஜயா பதிப்பகத்தில் நின்று கொண்டு பெருமாள் முருகனைத்தான் அழைத்து தனிப்பாடல் திரட்டில் எந்தப் பதிப்பு வாங்கலாம் என்று கேட்டேன் என்பதும் நினைவிருக்கிறது. அப்போது அந்த இளைஞனுக்கு தான் பின்னாளில் காமத்துப்பாலிற்கு உரை எழுதப் போகிறோம் என்பது தெரியாது. “தேனொடு மீன்” என்று கம்பனின் சொல் கொண்டே ஒரு நூல் வெளியிடுவோம் என்பது தெரியாது.” பழைய யானைக் கடை “ என்கிற பெயரில் சங்கக் கவிதை சிரிக்கிறதா என்பதை ஆராய்வான் என்பதும் தெரியாது.

“வான்குருவியின் கூடு” குறித்து நான் எழுதிய கட்டுரைக்கு இட்ட தலைப்பு “ இந்தக் கட்டுரைக்கு பத்துத் தலைப்புகள் சூட்ட ஆசை” . தலைப்பே நூல் எவ்வளவு கவர்ந்தது என்பதைச் சொல்லிவிடுவது. அந்த நூலில் “ தொன்னூற்கு அஞ்சி தடுமாறும் உளத்தன்” நல்ல மாணாக்கன் ஆக முடியாது என்கிற நன்னூல் வரியை குறிப்பிட்டிருந்தார். “நான் அப்படியல்ல “ என்று சொல்லிக் கொண்டேன். என் சமீபத்திய பேட்டியொன்றில் நான் கவிஞன் மட்டுமல்ல தமிழ் மாணவனும் கூட என்று தைரியமாகவே சொல்லிக் கொண்டேன்.

பெருமாள் முருகன் என்கிற பெயர் ஒரு பருவத்தில் வே.பாபு என்கிற பெயரோடு இணைந்ததாக இருந்தது எனக்கு. பாபு மயக்குவித்தைகளில் வல்லவன். முருகனும் அவனில் மயங்கி இருந்தார். முருகன் என்கிற விளி அவனுடையது. இப்போது ஒரு சம்பவம் நினைவில் எழுகிறது. ஒரு நாள் காலையில் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு போன்..அழைத்தது அவர்தான்.

“இந்த பாபுவ பத்தி நிறைய புகார் வருதே இசை.. எப்பாவாவது குடிச்சா பரவால்லா, தினமும்னா ஒடம்பு என்னாகும்…?”

“ஆமாம்ணா.. குடி அதிகமாயிருச்சுன்னுதான் சொல்றாங்க. நானும் இங்க கோவையில் இருக்கேனே. கண்கானிக்க முடியல..”

“இன்னைக்கு சேலம் போறேன்.. பேசறேன்…”

“நல்லா கடுமையாவே பேசுங்கண்ணே.. இலக்கியத்துக்குள்ள குடி ஒரு ஓரமா இருக்கலாம்.. குடிப்பதுக்காக இலக்கியம் இல்லன்னு தெளிவா சொல்லுங்க…”

“ஆமா…போறேன்.. கடுமையாவே சொல்றேன்…”

மாலையில் பாபுவை அழைத்து பெருமாள் முருகன் வந்தாரா? என்று வினவினேன்.

“ஆமான்டா..வந்தாரு,, இப்பத்தான் ‘லக்கில’ ஒரு பீர் வாங்கிக் குடுத்து பஸ் ஏத்தி விடுறேன்…”

அவன் அவரை மிக எளிதாக ஏமாற்றிவிடுவான் என்று எனக்கு முன்பே தெரியும். அவனுக்கும் குடிக்கும் இடையே நிற்க இன்னொன்று இருக்கவில்லை.

நான் பெருமாள்முருகனின் இல்லங்களுக்கு சென்றிருக்கிறேன். குடும்ப விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். சமீபத்தில் கூட அவரது மருமகளின் சீமந்தத்தில் கிட்டத்தட்ட இழுத்துப் போய் மேடை ஏற்றினார். பாபுவின் மறைவிற்குப் பிறகு அவர் என்னை பாபுவாகவும் பாவிக்கிறாறோ என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு. நான் அவருக்கு பாபுவாக இருக்க விரும்புகிறேன். பாபுவைப் போல் ஆகிவிடாத ஒருவனாகவும்.

அவரது “ வேப்பெண்ணெய் கலயம்” சிறுகதை நூலை நானும் பாபும் சேர்ந்து பெற்றுக் கொண்டதாக நினைவு. அவர் பிரபல எழுத்தாளராக ஆகிய பின் வந்த“ கழிமுகம்” நாவலை அச்சிற்குச் செல்லும் முன் வாசித்து கருத்துச் சொன்ன சிலரில் நானும் ஒருவன். பொறுமையாக நான் சொன்ன கருத்துக்களையெல்லாம் கேட்டுக் கொண்டார். அவரது “சேத்துமான் கதைகள்” நூலை கோவை புத்தக கண்காட்சியில் வெளியிட்டுப் பேசினேன். ஒளவையார் பாடல்கள் குறித்து நான் எழுதிய “ களி நெல்லிக் கனி” நூலிற்கு அவரிடம் ஒரு பின்னட்டை குறிப்பு பெற எண்ணினேன். அவரது ‘உலகப்புகழ்’ என்னைத் தயங்கச் செய்யவில்லை. ஆனாலும் அவருக்கு நேரம் வாய்க்குமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் அதைக் குறித்த காலத்திற்குள் எழுதி அளித்தார்

அவரது எளிமை எல்லோரும் குறிப்பிடும் ஒன்றுதான். அதுவே அவரது இயல்பு. அவரோடு கழித்த நாட்களில் நான் அதை அருகிருந்து கண்டிருக்கிறேன்.

சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விருப்பமானவர்களாக இருப்பார்கள். பெருமாள் முருகன் அப்படி எண்ணற்ற மாணவர்களின் விருப்பத்திற்குரியவர். அவர் கூடவே இருக்கும், அவர் வீட்டிலேயே தங்கி இருந்த பல மாணவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பொதுவாகச் சுட்ட எங்களிடம் ஒரு விளி உண்டு. அது” அய்யா வழி” என்பது. அநேகமாக இந்த அழகிய கேலி காலச்சுவடு கண்ணன் உருவாக்கியதாக இருக்கலாம். எனக்கு மிகப் பிடித்தமான கேலி. பெருமாள் முருகனைப் புகழ இதை விட வேறு சொற்கள் எதுவும் உதவிவிடாது. நானும் அவரது சில மாணவர்களைப் பார்த்து” ஓ..நீங்க அய்யா வழியா?” என்று கேலி பேசியுள்ளேன். இப்போது யோசித்தால் நானும் ஒரு வகையில் ‘அய்யா வழி’ யின் ரகசிய உறுப்பினன்தான் என்று தோன்றுகிறது. சமீபத்தில் சுரேஷ் என்கிற என் தீவிர வாசகர் ஒருவரைச் சந்தித்தேன். அரசுப்பள்ளியில் தமிழாசிரியர். அச்சமூட்டும் அவரது அன்பை ஆழமாகத் தோண்டிப் பார்த்ததில் அவரும் ‘ அய்யா வழி’ யில் வந்தவர் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

“புலவராயிடுடாதீங்க..” என்று சமீபநாட்களாக சுகுமாரன் என்னை எச்சரித்து வருகிறார். அப்படி ஒரு தீங்கு நேர்ந்தால் பெருமாள் முருகனுக்கு நிச்சயம் அதில் பங்குண்டு.

சமீபத்தில் என் நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஒரு நண்பர் நான் கட்டுரைகள் எழுதுவதை குறைத்துக் கொண்டு கவிதைகள் எழுதுவதில் மாத்திரம் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரினார். அன்பு மிக்க கோரிக்கைதான் சிக்கல் என்னவெனில் கவிதைச் செயல்பாட்டின் ஒரு பகுதி வாதை கூடியது. பரவசமும் வாதையும் என்று இதைச் சரியாகச் சொல்லலாம். ஆனால் பழந்தமிழ் கவிதைகளை வாசிப்பது, அது குறித்து எழுதுவது எனக்கு அலாதியான இன்பம் அளிக்கும் ஒன்றாக உள்ளது. பழந்தமிழ் கவிதைகளில் நகையைத் தேடும் முயற்சியாக “பழைய யானைக் கடை” நூலை எழுதிக் கொண்டிருக்கையில் நள்ளிரவு இரண்டு மணிக்கு நந்திக்கலம்பகத்தில் இருந்து ஒரு பிரமாதமான பாடல் கிடைத்தது. புதையுண்டிருக்கும் பொக்கிஷத்தைத் தேடித் தோண்டுகையில் கேட்கும் “ டன்” என்ற ஒலி போல் ஒலித்தது அப்பாடல். அதிகாலை 5 மணிக்கு எழுந்து வழக்கமாக ஓடுவதை விட இரண்டு வட்டம் அதிகமாக ஓடினேன். கம்பன், பாட்டும் , இசையும் எப்படி பொருந்தியிருக்க வேண்டும் என்பதைச் சொல்கிறான்..” பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்…” பறக்கும் பருந்தும் , அதன் வீழும் நிழலும் போலிருக்க வேண்டுமாம். அந்தப் பாடலைப் வாசித்த அன்று அந்தப் பருந்தைப் போன்றே நாள் முழுக்கப் பறந்து கொண்டிருந்தேன். தமிழ் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. புலவராக ஆகி விட மாட்டேன் அதே சமயம் தமிழ் மாணவன் என்கிற இன்பத்தையும் இழக்க மாட்டேன் என்பதை சுகுமாரன், பெருமாள் முருகன் இருவருக்குமான பொதுவான செய்தியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

“என்னன்னு தெரிலைடா.. முருகன் போன் பண்ணினார். உன்னைப் பற்றி நிறைய விசாரித்தார்.. கடைசில அவர் சந்தோசமாகத்தானே இருக்கார் என்று வேறு கேட்டார்” ஒரு முறை பாபு இப்படிச் சொன்னான். சந்தோசமாக இருக்கிறேன், இல்லை என்பதைத் தாண்டி , நம் சந்தோஷத்தில் அக்கறை கொள்ள ஒருவர் இருக்கிறார், அதுவும் அவர் நான் என் வாழ்வை நிறைப்பதாக நம்பும் இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகவும் இருக்கிறார் என்கிற எண்ணம் , என்னை எப்படியாவது சந்தோஷமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்வை அளித்தது. சந்தோஷம் கெடக்குது கழுத, அதெல்லாம் பாத்துக்கலாம்ணே…

சமீபத்தில் கம்பனின் காதல் கவிதைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். அது பலருக்கும் பிடித்திருந்தது. அந்தக் கட்டுரையை விரித்து நூலாக்கும் எண்ணமும் எழுந்தது. ஒரு நவீனக் கவியாக பழந்தமிழ்க் கவிதைகளில் நான் மொத்தமாக மூழ்கி விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும் என்னுள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒளவையார் கவிதைகள் குறித்து இப்போது தான் எழுதி முடித்து நூலாக்கியுள்ளேன். எனவே மறுபடியும் கம்பனைக் குறித்து எழுத வேண்டுமா என்கிற குழப்பம் சில நாட்களாக என்னை வதைத்து வந்தது. தெளிவாக ஒரு முடிவையும் எட்ட இயலவில்லை. அப்போது ஒரு இரவில் பெருமாள் முருகன் அழைத்தார்.. “ கட்டுரை வாசித்தேன், சிறப்பாக இருந்தது. நீங்க ஏன் இதை ஒரு தனி நூலாகவே விரித்து எழுதக் கூடாது?”

நூல் 40 - ம் பக்கத்தில் நிற்கிறது அய்யா


    நன்றி; உயிர் எழுத்து- அக்- 2025


Comments

Popular posts from this blog

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

  கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு  பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு  வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே  ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம்  எதுவென்றுரைத்தால்  அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே  வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...

ஒரு ப்ரவுன்கலர் ஜட்டியைப் பார்த்தீர்களா ?

“மேகம்” கட்டிலுக்கடியில் தவழ்ந்து போகையில் அவரது தொந்தி நிலத்தில்தேய்ந்து மோசமாக மூச்சுமுட்டியது ஏழாவதுமுறையாக குளியலைறைக்குச் சென்று சல்லடை போட்டார் தன் சகஎழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில் ” பழக்கம் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு அவரது பையையும் பரிசோதித்துவிட்டார். ஜன்னல் கம்பியில் காயப்போட்டதாகத்தான் நினைவு. காற்று இந்த மூன்றாவது மாடியிலிருந்து அதை கீழே தள்ளி விட்டிருக்கலாம். கண்களைப்பிடுங்கி கீழே வீசி பொறுமையாகத் துழாவினார். பிறகு கண்களை நம்பாமல் அவரே இறங்கிப் போனார். அவர் ஒன்றும் தரித்திர கலைஞர் அல்ல அவரிடம் இப்போது கூட சுளையாக 500 ரூபாய் இருக்கிறது. ஆயிரம் ஜட்டிகள் வாங்கினாலும் இடதுபுற எலாஸ்டிக் பட்டையில் அது போலவே நூல்பிரித்து விட உறுதியாக அவருக்கு தெரியாது. நாம் அசட்டை செய்வது போலவோ கிண்டலடிப்பது போலவோ அது ஒன்றும் சாதாரண ஜட்டி இல்லை. அவரது இல்லத்து அரசி அந்த ப்ரவுன் கலர் ஜட்டிக்கு பொறுப்புணர்வு என்று பெயர் சூட்டி அனுப்பியிருக்கிறார்.                 ...