இன்னொரு அந்தியின் படத்தை அனுப்பியிருந்தாள் மகள் அந்தி எப்போதும் புதியது புத்தம் புதியது அத்தனை கண்களையும் அகலத் திறப்பது படத்தின் ஊடே தலை நீட்டிக் கொண்டிருந்தது ஒரு வினய்ல் போர்டு நியான் விளக்குகள் மிளிரும் ஒரு வர்த்தக விளம்பரம் அந்தியின் முன் இன்னொன்றால் மின்னி விட முடியாது நான் பார்க்கப் பார்க்க வர்த்தகம் உருகியது விளம்பரம் உருகியது போட்டியும் வெற்றியும் உருகி வழிந்தது அந்தப் பலகை அந்தியில் கலந்து அந்தி என்றே ஆனது “அந்தியே…!” என்று அழைத்தால் அதற்கு அவ்வளவு வெட்கம்! அவ்வளவு பெருமிதம்! நன்றி ஆனந்த விகடன்- தீபாவளி மலர் |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments