Skip to main content

பற்றி எரியும் குடிசை


           
 சிறியமலருக்கு
 எட்டு ராட்சத டயர்கள்
 மந்தரித்த கயிரில் தொங்கும் ஒரு எலுமிச்சை வேறு
 எருமைக் கூட்டமொன்று அதன் மேல் நிற்கிறது
அந்த வழியே போன கவிஞன்
பற்றி எரியும் குடிசையைக் காண்பதைப் போல்
இதைக் காண்கிறான்
இப்படித்தான் அவன்
நாய்கடிக்கு ஊசி போடப் போன இடத்தில்
கணவனால் கடித்து  வைக்கபட்ட
லில்லிபுஷ்பத்தைக் கண்டான்
லில்லிபுஷ்பத்தை
கடித்து வைக்கும் உலகத்தில் வாழ்ந்து வருவதை
எண்ணி எண்ணிக் குமைந்தானவன்.
லில்லிபுஷ்பம் தன்னை லில்லிபுஷ்பம் என்றறியாததால்
கணவனுக்கு மாதாந்திர மாத்திரைகள் வாங்க
 மருந்தக வரிசையில் நிற்கிறாள் .
 சிறியமலர்
 தானொரு சிறிய மலரென்று அறிந்து கொண்டால்
 மீனைச் சுமக்க முடியாதென்று
பாதியில் நின்று விடாதா?

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.