புதன்கிழமைதோறும் என் ஊருக்கு தடுப்பூசி போடவரும் நர்ஸக்கா அம்மாவுக்குச் சிநேகிதம். நாள்முழுதும் உபயோகித்த ஊசிகளின் முனைகளை ஓய்ந்த மாலையில் என் வீட்டுவாசலில் அமர்ந்து வெட்டுவாள். அந்த எலிப்பொறி போன்றதொரு இயந்திரத்தை கண்கொட்டாது பார்த்து நிற்பேன். அவள் ஒவ்வொரு முறை நறுக்கும்போதும் அதிலிருந்து மயிலொன்று அகவும். புதன்கிழமைதோறும் வீட்டுமுற்றத்தில் மயில்கூட்டம். பலநாட்கள் இரகசியம் காத்த மயில்கதையை ஒரு நாள் சொல்லியேவிட்டேன் அவளிடம். அதைக்கேட்டு அழகாக சிரித்தபடியே என் தலைசிலுப்பிச் சொன்னாள்... "ஏதோ ஒரு சின்னக் கோளாறு.. எண்ணெய்விட்டால் சரியாயிடும்..." அக்கா... அக்கா எண்ணெய்விட்டால் மயில் பறந்து போய்விடாதா? |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments