பயங்கரம் ஒரு அட்டவணையில் இருந்தது அழகு வேறொரு அட்டவணையின் கீழ் இருந்தது ஆயினும் இரண்டும் கண்ணொடு கண் நோக்கி அமர்ந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அழகு பயங்கரமாகி வந்தது. பயங்கரம் அழகு கொண்டு எழுந்தது. அழகிற்காக மனிதத் தலையொன்று மண்ணில் துண்டாகி வீழ்ந்தபோது அழகு பயங்கரமாகிவிட்டது. பயங்கரம் என்று அறிந்திருந்தும் அதைத் திரும்பத் திரும்ப காண உந்தும் துடிதுடிப்பில் பயங்கரம் அழகாகிவிட்டது. பயங்கர அழகே! நான் சின்னஞ்சிறுவன் எனக்கு வழிவிடு! |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments