ஏரியைக் கடக்கும்போது அந்தியில் மனமழிந்து வண்டியை நிறுத்தாதே பார்த்துக்கொண்டே கடந்து போ ஏரி உன்னுள் பாய அரைநொடி போதும் "ஒருகை பார்க்கிறேன்" என்று அதன்முன் சம்மணமிட்டு அமராதே நமக்குத் தெரியாதா என்ன? யுகயுகமாக நம் கண்கள் எவ்வளவு பெரிய கொள்ளிக் கண்கள். பார்த்துப் பார்த்து அதை துண்டு துண்டாய் உடைக்காதே வாயை அகலப்பிளந்து மொத்தமாய் விழுங்கிவிடத் துடிக்காதே உன் நினைவில் ததும்பட்டும் அது வீட்டிற்கு அழைத்துப் போ ஏரியை. |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments