ஏரியைக் கடக்கும்போது அந்தியில் மனமழிந்து வண்டியை நிறுத்தாதே பார்த்துக்கொண்டே கடந்து போ ஏரி உன்னுள் பாய அரைநொடி போதும் "ஒருகை பார்க்கிறேன்" என்று அதன்முன் சம்மணமிட்டு அமராதே நமக்குத் தெரியாதா என்ன? யுகயுகமாக நம் கண்கள் எவ்வளவு பெரிய கொள்ளிக் கண்கள். பார்த்துப் பார்த்து அதை துண்டு துண்டாய் உடைக்காதே வாயை அகலப்பிளந்து மொத்தமாய் விழுங்கிவிடத் துடிக்காதே உன் நினைவில் ததும்பட்டும் அது வீட்டிற்கு அழைத்துப் போ ஏரியை. |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments