நீ ஒன்றை விரும்பினாய் மனிதன் மின்னலை விரும்புவதைப் போல நீ ஒன்றை ஆழமாக மோகித்து விட்டாய் அதுவோ தூர தூரத்தில் உச்சியின் உச்சியில் வீற்றிருக்கிறது. அம்மா நிலவைக் காட்டி சோறூட்டுவதில் ஒரு போதனை உள்ளது துயரம் என்னவெனில் அதை நாம் கற்பதில்லை ஆசை அழிக்க முடியாத ஒரு மலர் அது பிறக்கிறது அழிவதென்னவோ நீ அழிகையில்தான். நீ ஒன்றில் பித்தாகிவிடுகிறாய் அதுவோ ஆகப் பெரியது ஆகவே நீ அதற்குப் பதிலாக அது போல் ஒன்றை காதலிக்கத் துவங்குகிறாய் உன் பெரியது சிறிதளவே உள்ள சிறியது நீ அதனுடன் சிரிக்கப் பழகுகிறாய் இளையராஜவைத்தான் காதலிக்கிறோம் என்பதறியாமல் ராஜாவைப் போல் பாடும் பையன்களை சிநேகித்த அக்காக்கள் கூடவே ரஹ்மானைக் காதலிப்பதற்குப் பதிலாக சடை வளர்த்த பையன் பால் மையல் பூத்து மணமுடித்த தோழியர்கள் யாவரும் நலம்தானே இப்போது? |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments
இதுதான் இசை டச் .