“விலை மதிப்பற்றது” என்கிற குறிப்போடு போட்டோவில் ஒரு பொருளை அனுப்பிருந்தாய் அதனோடே சேர்ந்து வந்து விட்டது உன் சுண்டு விரல் பிறகு அப்பொருள் ஒரு சின்ன விலைக்குள் அடங்கிவிட்டது “ஆகச் சிறந்த கவிதை” என்று ஒன்றை அது போன்றே அனுப்பி வைத்தாய் இன்னும் நான் அதை வாசிக்கவில்லை. மகத்தான ஒன்று மகத்தான இன்னொன்றை குறிப்பிட்டுக் காட்டுவதில் என்னவோ சிக்கல் இருக்குதடி? சில விரல்கள் நிலவைச் சுட்ட உகந்தவையல்ல பிறகு மொத்த நிலவும் காணாமல் போய்விடுகிறது. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments