“சத்தியம் தோற்பதில்லை!" இதைச் சொன்ன போது என் நெஞ்சம் விம்மியது கண்கள் கொஞ்சம் கலங்கின முஷ்டி தானாகவே விண்ணை முட்டியது. "என்னையா அழைத்தாய்.."? என்று கேட்டு என்னை நோக்கி சத்தியங்கள் எழுந்து வந்தன. வெள்ளையில் கருப்பில் கருப்பு வெள்ளையில் பழுப்பில் ஆரஞ்சில் ஊதாவில் கலக்கவே முடியாத கலவைகளில் வானவில்லின் நிறத்தில் கூட ஒன்று இருந்தது. "என்னையா அழைத்தாய்...? இந்த முறை கொஞ்சம் சத்தமாக கேட்டன நான் அதைவிடச் சத்தமாய் அண்ணாந்து கூவினேன்... "எப்படியாயினும் ஏதோ ஒரு சத்தியம் தோற்பதில்லை" |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments