உனக்கென்ன பைத்தியமா….? அவள் கத்திக் கொண்டிருக்கிறாள் அவன் தலைகுனிந்து நிற்கிறான் பிறகவன் தன் கண்களை எடுத்து அவள் முகத்தில் விட்டான் தன் காதுகளைக் கிள்ளி அவளுக்குச் சூட்டினான் தன் நெஞ்சத்தை அவளுள் துடிக்க விட்டான் கண்கள் அவை கொழுத்த ஆசையை இரண்டு துண்டாய் உருட்டிய உருண்டைகள் செவிகள் அவை புறத்திற்கொன்றெனப் படுத்திருக்கும் இரண்டு வேட்டை நாய்கள் நெஞ்சம் அதில் கொசுத்திரள் கொடுக்கின் கும்மாளக் கூச்சல் உனக்கென்ன பைத்தியமா…? அவன் கத்திக் கொண்டிருக்கிறான் அவள் தலைகுனிந்து நிற்கிறாள். |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments