தொண்டைக்குழிக்குள் குச்சியைச் செலுத்தி
சளி சேகரித்த அந்தத் தாதி மல்லிகை சூடியிருந்தாள். மல்லிகையின் கீழ் அமர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன். நான் மருந்துவரைக் காண்பேன். மருந்துகள் எடுத்துக் கொள்வேன். அரசு சொல்லும் அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிப்பேன். ஆனால், மல்லிகையே ! நான் உன்னைத்தான் நம்பியுள்ளேன். |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments