Skip to main content

நான் கர்ணன்

  



சாரங்கி கேவத் துவங்குகிறது.


பால்ய நண்பனோடு பழங்கதைகள் பேசியபடியே

டேபிளுக்குக் கீழே

அவன் மனைவியின் தொடை மீது

கைவைத்துள்ள ஒருவன்

தானும் சேர்ந்து விம்மத் துவங்குகிறான்


கழுத்துச் சங்கிலிக்காக 

தாயின் தலைமீது

பெரிய கல்லைத் தூக்கிப் போட்ட 

ஒரு செல்வன் 

தானும் சேர்ந்து விம்மத் துவங்குகிறான்


விம்மிச் செழித்த முலைகளால்

முதலாளியின்

மாந்தோப்புகளை

வளைத்துப் போட்டுக் கொண்ட ஒருத்தி

தானும் சேர்ந்து 

விம்மத் துவங்குகிறாள்


கொஞ்சமே இருக்கும் மதுவை

சமமாகப் பகிர வேண்டிய

இக்கட்டான தருணத்தில்

எதிரே இருக்கும் மனிதனுக்கு

விட்டத்துப் பல்லியை வேடிக்கை காட்டுவேன் 


ஆயினும்

நான் கர்ணன்


சாரங்கி வில்லும் 

ஒரு குடிகாரக் கவிஞனும் சேர்ந்து

போகிற போக்கில்

ஒரு உள்ளம் விடாமல்

எல்லா உள்ளத்தையும்

'உள்ளத்தில் நல்ல உள்ளம்'

ஆக்கி வைத்தார்கள்.


Comments