அந்தியில் மிதக்கும் வெண் கொக்கு மங்கலாகி விடுகிறது. அந்தி எல்லாவற்றையும் மங்கலாக்க விரும்புகிறது. நமது மூர்க்கத்திற்கெதிராய் ஒவ்வொரு நாளும் தெய்வீகத்தை ஏந்தி வந்து போராடுகிறது அது. மங்கும் வேளையில் வானில் விசாலத்தில் கடலின் ஆழத்தில் வேறொன்று உதிக்கிறது நிலவுக்கு முன். மங்க மாட்டாது எரிந்து கொண்டிருக்கும் ஒருவன் மோட்டார் சைக்கிளை மேலும் முடுக்குகிறான். அந்தியின் வசமிருப்பது ஒரே ஒரு சொல்தான். ஒன்றே ஒன்று என்பதால் அது ஒரு மந்திரம். நாள் முழுக்க ஒன்றுமே செய்யாத ஒருவனிடமும் அது அவ்வளவு பரிவுடன் சொல்கிறது... "போதும்...! " |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments