அந்தியில் மிதக்கும் வெண் கொக்கு மங்கலாகி விடுகிறது. அந்தி எல்லாவற்றையும் மங்கலாக்க விரும்புகிறது. நமது மூர்க்கத்திற்கெதிராய் ஒவ்வொரு நாளும் தெய்வீகத்தை ஏந்தி வந்து போராடுகிறது அது. மங்கும் வேளையில் வானில் விசாலத்தில் கடலின் ஆழத்தில் வேறொன்று உதிக்கிறது நிலவுக்கு முன். மங்க மாட்டாது எரிந்து கொண்டிருக்கும் ஒருவன் மோட்டார் சைக்கிளை மேலும் முடுக்குகிறான். அந்தியின் வசமிருப்பது ஒரே ஒரு சொல்தான். ஒன்றே ஒன்று என்பதால் அது ஒரு மந்திரம். நாள் முழுக்க ஒன்றுமே செய்யாத ஒருவனிடமும் அது அவ்வளவு பரிவுடன் சொல்கிறது... "போதும்...! " |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments