பல்சர் கவிதைகள் 1. ராஜகுல முறை ஒழிக்கப்பட்டுவிட்டதால் மரணப்படுக்கையில் வீழ்ந்துவிட்ட ராஜ தோரணைக்கு உயிரூட்டும் முயற்சியாய் பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருப்பதே இந்த பஜாஜ் பல்சர். 2. ஒரு கன்றுக்குட்டியை ஏற்றிக் கொல்வதற்கு போதுமான இரண்டு பெரிய சக்கரங்கள் இதற்குண்டு. 3. அதிகாலை வெய்யிலில் மினுங்கும் பல்சரை வெற்றித் திளைப்பில் பளீரிடும் வீரனின் கை வாள் என்பேன். 4. மரநிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல்சரின் மீது ஒரு மலர் உதிர்ந்து கிடப்பதை பார்த்தேன். பணிப்பெண்கள் பூ மாரி பொழிந்ததில் ஒரு பூ மகாராஜவின் தலையிலேயே தங்கிவிட்டது என்று நினைத்துக் கொண்டேன். 5. சமீபகாலமாக ஒரு கலகக்குரல் ஒலித்துவருகிறது எனக்குள். வாயில் காப்போன் தேரில் போனால் பாதைக்கும் தேருக்கும் ஒன்றும் நேராது. 6. தன் பொக்கிஷத்தை வீதியில் வைத்துவிட்டு அரைமணி நேரத்திற்கும் அதிகமாய் எங்கோ பரதேசம் போபவன் இன்னொன்று வாங்கிக் கொள்ளட்டும்.