நள்ளிரவில் விழித்துக்கொண்டு பாலுக்கழுகிறது என் குழந்தை. ஒரு வாய் சோறதற்குப் போதவில்லை அள்ளிஅள்ளிக் கொட்ட எனக்குத் துப்பில்லை. கிறீச்சிடா வண்ணம் கதவு திறப்பதில் அது சமத்தெனினும் கொஞ்சம் கிறீச்சிட்டுத் தான் விடுகிறது. அப்போது நான் கண்மூடிக் கிடப்பது போல் கிடப்பேன். தெரியும், அது மண் தின்னப்போகிறது. போகட்டும். கையிரண்டில் அள்ளி வாய் முழுக்கத் தின்னட்டும். சதா ஏக்கத்தின் தேனூறும் அதன் கட்டை விரல் சுண்டச் சூம்பி விட்டது சீக்கரத்தில் மறைந்து விடும். கண்நுதல் நெருப்பில் தப்பிப்பிழைத்த ஒரு துளியிலிருந்து பிறந்து வளரும் குழந்தையிது, சிவனேன்னு கிடப்பதில்லை ஒரு பொழுதும்