Skip to main content

Posts

Showing posts from 2020

நலம் பெறுதல்

  கீ தா பேக்கரியின்  விசாலமான முற்றத்தில் நின்றுகொண்டு தன்னந்தனியாக அண்ணாந்து வான் நோக்குகிறேன் அதில் பொங்கி வழிகிறது பிறைமதி இவ்வளவு தேசங்களுக்கிடையே இவ்வளவு ஊர்களுக்கிடையே இத்தனை இத்தனை கல்லுக்கும், மண்ணுக்குமிடையே கடல்களுக்கும், மலைகளுக்குமிடையே ஒரு விநாடி கீதா பேக்கரி முற்றத்தைக் கண்டுவிட்டது நிலவு. அது  நலமா? என்றது. நான் நலமே! என்றேன்.

பொய்யா மாரி

தெ ருவில் குந்தியிருக்கும் அவருக்கும் தெருவில் படுத்துறங்கும் நாய்களுக்கும் எப்படியோ சிநேகம் உருவாகிவிட்டது. காவல்பணி முடித்து அதிகாலையில் வீடு திரும்புகையில் நான்கு ஜீவன்களை அழைத்துக் கொண்டு பேக்கரிக்கு ஊர்வலம் போவார். ஒரு கட்டு பிஸ்கட்டை உடைத்து மழையைத் தூவுவது போல் தூவிவிடுவார். அவருக்கும் நாய்களுக்கும் இடையே இருந்த பிஸ்கட் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நாளடைவில்  வேறொன்று பூத்துவிட்டது. இப்போதெல்லாம் மாதக் கடைசிகளில் அவர் தூவுவது போல் தூவுகிறார். அவை உண்பது போல் உண்கின்றன.

அணிலாட்டம்

மொட்டைமாடியை மூன்று வட்டம் அடித்த அந்த அணில்குட்டி கைப்பிடிச்சுவர்களில் குறுக்குமறுக்குமாக ஓடி அடுத்தவீட்டு ஆஸ்பெட்டாஸில் துள்ளிக் குதித்து காம்பவுண்டு சுவரில் ரோஜா செடிகளில்  ஆட்டமாடி பக்கத்தில் நின்றிருந்த தீக்கொன்றையில் ஓடோடி உச்சிக்கிளையேகியது. அங்கிருந்து  அருகிருக்கும் மின் கம்பத்திற்கு அந்தரத்தில் தாவுகிறேன் நான்.

இளஞ்சூட்டு முறுவல்கள

  அ திகாலைத் தேநீரோடு வழக்கத்திற்கு மாறாய் இரண்டு பட்டர் பிஸ்கட்டுகள் சொன்னேன். அதிகாலையிலேயே அதனோடு சேர்ந்து நீயும் வந்துவிட்டாய். கொட்டிக் கவிழ்க்கப்பட்டிருந்த விதவிதமான பதார்த்தங்களுள் அன்று  நீ ஏன் பட்டர்பிஸ்கட்டைத் தேர்ந்தெடுத்தாய்? அவ்வளவு பண்டங்களுக்கிடையே பட்டர் பிஸ்கட் ஜெயித்துவிடுமென்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதோ இன்று நானும் இந்த பிஸ்கட்டுகளுமாக எஞ்சியிருக்கிறோம். நானும் எழுந்த போன பிறகு எஞ்சியிருக்கும் சில பட்டர் பிஸ்கட்டுகள். அவை இங்கு எவ்வளவோ காலமாய் வாழ்ந்து வருகின்றன. எத்தனையோ பேர்களை வாழ்விக்கின்றன.

கூழின் சரிதம்

  நே ற்று இரயில் முன் பாய்ந்து கூழாகிப் போனவனுக்கு எண்ணற்ற நண்பர்கள் நாலைந்து காதல்கள் அத்தனை தோள்கள் அத்தனை மடிகள் அவனது ரயில்  எப்போது கிளம்பியதென உறுதியாகச் சொல்ல இயலவில்லை. அது நெருங்க நெருங்க ஒவ்வொரு தோளாக மாயத்தில் மறைந்தன. ஒவ்வொரு மடியாக விலகிப்போயின. ஆழிசூழ் உலகு அவனும் இரயிலுமாக அவ்வளவு சுருங்கிவிட்டது  அவன் அந்த இரயிலை எதிர்நோக்கி நின்றிருக்கிறான். அனந்தகோடி  தோள்களும் அனந்தகோடி மடிகளும் கொண்ட அது அதோ அவனை நெருங்கிவிட்டது.

கொக்கின் கீதம்

  ஏ தோ ஒரு தூரதேசம்… புல்வெளிப்பரப்பின்  பின்னணியில் நின்று கொண்டு பாடிக்கொண்டிருக்கிறான்  ஒரு பாடகன். மேலே மழைக்கருப்பின் ரம்மியத்தில் பூத்திருக்கிறது வானம். அப்போது அந்நிலக்காட்சியை ஊடறுத்துப் பறந்ததொரு கொக்கு ஐயோ…! அது  அவன் பாட்டையே தூக்கிக்கொண்டு பறக்கிறது. பாட்டு பறக்க அவனும் பறந்தான். அவனோடு பறந்தன பச்சையும் கருப்பும். பார்த்திருந்த நானும் பறந்தேன் சேர்ந்து.

தீபாவளி வாழ்த்துகள்!

அ ம்மா அப்பாவிடம் அவ்வளவு கனிவோடு சொன்னாள்... "தீபாவளியன்னைக்கு அஞ்சாறு குலோப் ஜாமூன்  சாப்டா அதெல்லாம் ஒன்னும் ஆயிடாதுங்க..." அம்மாவின் உறுதிப்பாடு கேட்டு க்ளூக்கோ மீட்டர், குலோப் ஜாமூன் இரண்டுமே ஒரு கணம் திகைப்பில் உறைந்துவிட்டன. குலோப் ஜாமூன் ஏதுமறியா ஒன்று அம்மா  அதனுள் காலத்தைப் புகட்டிவிட்டாள். அது ஒரு சடப்பொருள் அம்மா அதில் உயிரைப் பற்றவைத்தாள். மனமற்ற அதனுள் இரக்கத்தைப் பெருகப்பண்ணினாள். அப்பா கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டார். அடுத்த முறையிலிருந்து "குருவிவெடி" நான்கு கட்டுகள் சேர்த்து வாங்கவேண்டும் குலோப் ஜாமூன் வெடிப்பதற்கு.

கடுகடுப்பானவர்கள்

தீ பாவளி வந்துவிட்டது துப்புரவுப் பணியாளர்கள் பண்டிகைப் பணம் கேட்டு வருகிறார்கள். அவள் இளையவள்  மற்றும் கடுகடுப்பானவள் அநேக வீடுகளில் அவளை மேலும்  கடுப்பாக்கி அனுப்புகிறார்கள். மூன்று தெருக்களை மேய்க்கும்  அவளைப் போன்றே முந்நூறு மனிதர்களை மேய்க்கும் நானும் கடுகடுப்பானவன். இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து நீட்டினேன் அதே கடுப்போடு. முகம் முழுக்க அலைபரப்பி  அப்படியொரு சிரிப்பு அவளுக்கு. யார் கொடுத்தது? யார் கொண்டது? அந்தச் சிரிப்பை நாளெல்லாம் ஏந்திக்கொண்டு சுடர்விடுவதோ நான்.

கர்மவீரன்

  2 நிமிடத்திற்கு ஒருமுறை வாட்ஸ் அப்பை திறந்து பார்ப்பேன் 5 நிமிடத்திற்கு ஒருமுறை இ- மெயிலைத் திறந்து பார்ப்பேன் பேஸ்புக்கைத் திறக்கிறேன் மெசஞ்ஜரைத் திறக்கிறேன் மெசேஜைத் திறக்கிறேன் எங்கேயும் இல்லை எனக்கான செய்தி. அது ஒரு புழுவாகி கல்பகாலத்திற்கும் அப்பால் ஊர்ந்துவருகிறது. இவனோ திறந்து திறந்து திறந்து திறந்து திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.

கையது கொண்டு மெய்யது பொத்தி..

வெ ளிச்சம் சகலத்தையும் துலக்கிவிடுகிறது என்னைக் காண எனக்கு அவ்வளவு பயம் என்னைக் கண்டு அழுகை பொத்துக்கொண்டு வருகிறது எனக்கு வெளிச்சம் சிரிக்கிறது எங்குதான் ஓட? எங்குதான் ஒளிய? நின் பதமலரில் துளிவிரல் திற அதில் விரியுமொரு மதுர இருள். அதனுள் சுருள்வேன்.

பயங்கர அழகே!

ப யங்கரம்  ஒரு அட்டவணையில் இருந்தது அழகு  வேறொரு அட்டவணையின் கீழ் இருந்தது ஆயினும் இரண்டும்  கண்ணொடு கண் நோக்கி அமர்ந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அழகு பயங்கரமாகி வந்தது. பயங்கரம்  அழகு கொண்டு எழுந்தது. அழகிற்காக மனிதத் தலையொன்று  மண்ணில் துண்டாகி வீழ்ந்தபோது அழகு பயங்கரமாகிவிட்டது. பயங்கரம் என்று அறிந்திருந்தும் அதைத் திரும்பத் திரும்ப காண உந்தும்  துடிதுடிப்பில் பயங்கரம் அழகாகிவிட்டது. பயங்கர அழகே! நான் சின்னஞ்சிறுவன் எனக்கு வழிவிடு!

ததும்பு

ஏ ரியைக் கடக்கும்போது அந்தியில் மனமழிந்து வண்டியை நிறுத்தாதே பார்த்துக்கொண்டே  கடந்து போ ஏரி உன்னுள் பாய அரைநொடி போதும் "ஒருகை பார்க்கிறேன்" என்று அதன்முன் சம்மணமிட்டு அமராதே நமக்குத் தெரியாதா என்ன? யுகயுகமாக நம் கண்கள் எவ்வளவு பெரிய கொள்ளிக் கண்கள். பார்த்துப் பார்த்து அதை துண்டு துண்டாய் உடைக்காதே வாயை அகலப்பிளந்து மொத்தமாய் விழுங்கிவிடத் துடிக்காதே உன் நினைவில் ததும்பட்டும் அது வீட்டிற்கு அழைத்துப் போ ஏரியை.

உணவாவது

  தொ லைதூர கிராமங்களிலிருந்து சென்னைக்குள் வந்துவிழுந்த  ஐந்து இளைஞர்கள் நான்கு மாடிக்குடியிருப்பொன்றில் கீழ்தளத்தில் தங்கியிருந்தார்கள். முறைவைத்துச் சமைத்து முறைவைத்துக் கழித்து குறைவான சிக்கல்களோடு காலம்தள்ளி வந்தார்கள். எவ்வளவுதான் முறைவைத்தாலும் குறைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆகவே முறையும் குறையுமாக வாழ்ந்துவந்தார்கள். அதிலொருவனுக்கு  அன்று திடீரென ஒரு மகிழ்ச்சி உதித்துவிட்டது. "மொட்டைமாடியில் வைத்து உண்போமா?" எல்லோரிடமும் அது பற்றிக்கொண்டது. படி வரிசையில் கைமாறி மைமாறி  மேலே செல்கின்றன பாத்திரங்கள். சுமை தோன்றுகையில் நகைச்சுவையும் தோன்றிவிடுகிறது. பாத்திரங்களோடு பாத்திரமாக சேர்ந்துகொள்கிறது சிரிப்பு.  உண்ணத்தயார் நிலையில் உள்ளது உணவு. ஆனால் ஏதோ ஒன்றை  அவர்கள் ஏற்கனவே பகிர்ந்து உண்டிருந்தார்கள். "கொலப்பசி..." என்று துரிதப்படுத்திய ஒருவன் இப்போது நிலவைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான்.

பழுதான ஒன்றிலிருந்து பறந்துவரும் மயில்

பு தன்கிழமைதோறும்  என் ஊருக்கு தடுப்பூசி போடவரும் நர்ஸக்கா அம்மாவுக்குச் சிநேகிதம். நாள்முழுதும் உபயோகித்த ஊசிகளின் முனைகளை ஓய்ந்த மாலையில் என் வீட்டுவாசலில் அமர்ந்து வெட்டுவாள். அந்த எலிப்பொறி போன்றதொரு இயந்திரத்தை கண்கொட்டாது பார்த்து நிற்பேன். அவள் ஒவ்வொரு முறை நறுக்கும்போதும் அதிலிருந்து மயிலொன்று அகவும். புதன்கிழமைதோறும் வீட்டுமுற்றத்தில் மயில்கூட்டம். பலநாட்கள் இரகசியம் காத்த மயில்கதையை  ஒரு நாள் சொல்லியேவிட்டேன் அவளிடம். அதைக்கேட்டு அழகாக சிரித்தபடியே என் தலைசிலுப்பிச் சொன்னாள்... "ஏதோ ஒரு சின்னக் கோளாறு.. எண்ணெய்விட்டால் சரியாயிடும்..." அக்கா... அக்கா எண்ணெய்விட்டால் மயில் பறந்து போய்விடாதா?

நார் இல் மாலை - சங்கத்து மாலைக்காட்சிகள்

அ.முத்துலிங்கம் தன் சமீபத்திய உரையாடலொன்றில் இதுபோலச் சொன்னார். “சங்க இலக்கியங்கள படிச்சாவே போதும்...எதுக்கு மத்த இலக்கியத்தெல்லாம் படிச்சுட்டு என்று சில சமயம் தோன்றும்..”. எனக்கும் சில சங்கப்பாடல்களை வாசிக்கையில் அப்படித் தோன்றியதுண்டு. அகப்பாடல்களின் முதற்பொருள் நிலமும் பொழுதும். அவை நிலத்தையும் பொழுதையும் விரித்துப் பேசியவை. தொல்காப்பியம் வகுத்துச் சொல்லும் ஐவகை நிலங்களை நாம் அறிவோம். பொழுதுகளில் பெரும்பொழுது, சிறுபொழுது என்று இரண்டுண்டு. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் போன்ற பருவங்கள் பெரும் பொழுதாகவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் போன்ற பொழுதுகள் சிறுபொழுதுகளாகவும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றுள் மாலையைப் பற்றியே நம் அகப்பாடல்கள் அதிகமும் பாடியுள்ளன. சங்கத்து மாலைக்காட்சிகளில் நான் கண்டு மயங்கிய சிலவற்றை பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். சங்கப்பாடல்கள் எல்லா பொழுதையும் பாடியுள்ளன. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு பொழுது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் எல்லா பொழுதுகளும் அதில் உண்டு. “தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே” (கு

எதற்கு?

  நா ன் காத்திருக்கிறேன். எதற்கென்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு விடியலிலும் அவ்வளவு ஆவலோடு  கதிரவனிடம் கேட்கிறேன்... "இன்றெனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்..?" எனக்குத் தெரியும். அது எதுவும் பேசாது. நான் காத்திருக்கிறேன் எதற்கென்று எனக்குத் தெரியாது. எண்ணெய் படிய தலைவாரிக் கொண்டு சாலையின் இடதுபுறமாக அலுவலகம் போய் வருகிறேன். நான் காத்திருக்கிறேன் ஆனால் எதற்கென்று உறுதியாக எனக்குத் தெரியாது.

அழகான ஏற்பாடு

  க தவு என்பது அழகுணர்ச்சி கூடிய அவசியமானதோர் ஏற்பாடு என் வீட்டுக்கதவை நினைத்த மாத்திரத்தில் திறப்பேன் நினைத்த மாத்திரத்தில் அடைப்பேன். என்  ஒரு கதவைத் திறப்பதற்குள் எனது நான்கு கேடயங்கள்  உடைந்து நொறுங்கிவிட்டன. என் ஒரு கதவை அடைப்பதற்குள் எனது ஏழு குதிரைகள் வீழ்ந்து மடிந்துவிட்டன.

நிறைவு

" இ ன்னொன்று ...?"   என்று   கேட்டது   நா . நான்     அதை   அதட்டவில்லை . அன்பு   கொண்டு   ஒரு   முறை   ஆழ்ந்து     நோக்கினேன் . ஏனோ   பிறகு   அது   அனத்தவில்லை . இன்னொன்று   இல்லாத   காலி   வயிற்றில்   நிறைந்திருக்கும்   அந்த   ஒன்றை நாளெல்லாம்   தடவித்தடவிக்   களித்தேன் . மடியில்   எடுத்து   வைத்துக்   கொஞ்சினேன் .

இரங்கற்பா

உ ன் மது செத்துவிட்டது நீதான் அதனைக் கொன்றாய் கத்தியால் அடிவயிற்றில் ஓங்கி ஓங்கிக் குத்தினாய். உன் மது விறைத்துக் கிடக்கிறது. உயர்ரகத்து மூலப்பொருட்கள்.. துல்லியமான கலவை.. விண்ணையே சமைக்கும் விற்பன்னர்.. ஆயினும் மதுவை அங்கு காணவில்லை. உன் நடனம் எங்கோ ஒளிந்து கொண்டிருப்பது போல அதுவும் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது.