தொலைதூர கிராமங்களிலிருந்து சென்னைக்குள் வந்துவிழுந்த ஐந்து இளைஞர்கள் நான்கு மாடிக்குடியிருப்பொன்றில் கீழ்தளத்தில் தங்கியிருந்தார்கள். முறைவைத்துச் சமைத்து முறைவைத்துக் கழித்து குறைவான சிக்கல்களோடு காலம்தள்ளி வந்தார்கள். எவ்வளவுதான் முறைவைத்தாலும் குறைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆகவே முறையும் குறையுமாக வாழ்ந்துவந்தார்கள். அதிலொருவனுக்கு அன்று திடீரென ஒரு மகிழ்ச்சி உதித்துவிட்டது. "மொட்டைமாடியில் வைத்து உண்போமா?" எல்லோரிடமும் அது பற்றிக்கொண்டது. படி வரிசையில் கைமாறி மைமாறி மேலே செல்கின்றன பாத்திரங்கள். சுமை தோன்றுகையில் நகைச்சுவையும் தோன்றிவிடுகிறது. பாத்திரங்களோடு பாத்திரமாக சேர்ந்துகொள்கிறது சிரிப்பு. உண்ணத்தயார் நிலையில் உள்ளது உணவு. ஆனால் ஏதோ ஒன்றை அவர்கள் ஏற்கனவே பகிர்ந்து உண்டிருந்தார்கள். "கொலப்பசி..." என்று துரிதப்படுத்திய ஒருவன் இப்போது நிலவைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான். |
Comments