Skip to main content

Posts

Showing posts from May, 2017

லீலை

வெயில் வறுத்தெடுத்ததால் பியர் பருகும் ஆசை துளிர்த்துவிட்டது துளிர்த்த மறுகணமே பெருமரமாகி பேயாட்டம் போட்டது ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த சித்தப்பாவின் இதயத்துடிப்பை பிடித்து நிறுத்தி அரைநாள் விடுப்பு பெற்றேன். வெயில் நன்று, அது வாழி! சூரியன் எரிய எரிய என் பியர் குளிர்ந்து வருகிறது வெம்மையைப் போற்றுவோம்; அது குளிரை இனிப்பாக்குகிறது வெயிலைப் பாடியபடி பியரைப் பாடியபடி மதுவிடுதிக்கு பயணமானேன். திடீரென முழு  வானமும் இருட்டிவிட்டது. என் உலகம் மொத்தமாய்த் தொங்கிவிட்டது. மதுவிடுதியின் வாசலில் வண்டியை நிறுத்துகையில் மூக்குநுனியில் ஒரு மழைச் சொட்டை உணர்ந்தேன் சிப்பந்தி அருகில் வந்து " என்ன வேண்டும் .." என்றார். "கொதிக்கக் கொதிக்க வெய்யில்" என்றேன்

காந்தியம்

மஞ்சள் என்று சொல்லி விட முடியாதபடிக்கு ஒரு வித மரக்கலரில் இடையே கொஞ்சம் பச்சை வாங்கி சிவந்த பொன்னிறத்தில் கிறங்கடிக்கும் வாசனையுடன் நடுமத்தியில் அளவானதான அழகான ஓட்டையோடு நாவூறித் ததும்பச் செய்யும்.... உலகத்தை  வெல்வது கிடக்கட்டும் முதலில் இந்த உளுந்து வடையை வெல்!                  நன்றி: ஆனந்த விகடன்

பாசஞ்சர் இரயிலில் ஓர் எலி

ஒரு நல்ல கவிதையின் இடையே குறுக்கிட்டு நச்சரித்தாள் அந்தப் பிச்சைக்காரச் சிறுமி. இப்போதெல்லாம் கருணையும், கண்டிப்புமான ஒரு முகத்திற்கு பழகியிருக்கிறேன். அதை அவளிடம் காட்டித் திரும்புவதற்குள் கவிதைக்குள் விளையாடிவிட்டது ஒரு சுண்டெலி. இரண்டு வரிகளை இடம் மாற்றி வைத்துவிட்டதது. அந்தக் கவிதை புரியாமல்தான் அதைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஒரு சமோசா வியாபாரியைப் போல் பெட்டி பெட்டியாக அலைகிறேன்.

காணீர்!

  39 வருடங்களாக ஒழுக்கம், நன்னெறி தார்மீகம், கண்ணியம் வெங்காயம், மிளகாய் கத்தரி, தக்காளி எல்லாவற்றையும் ஏத்திக் கட்டிக்கொண்டு  நன்றாகத்தான் உருண்டு  வந்தந்த  வண்டி. இந்தக் காலையில் ஒரு சின்னஞ்சிறு மல்லிகை தடுக்கி அது நடுரோட்டில் தலைகுப்புற விழுந்ததைப் பாரீர்! வெங்காயமும் நன்னெறியும் சாக்கடைக்குள்  உருண்டோடுவதைக் காணீர்!

வார்த்தையில் வாழ்தல்

                          மனிதஇனத்தின் வாயிலும், எழுத்திலும் தொடர்ந்து பயின்று வரும் வரிகள் “ பொன் மொழிகள் “ ஆகி விடுகின்றன. பழமொழிகளும் இவற்றில் அடங்கும். இரண்டு எழுத்தாளர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது   இருவரின் சார்பிலும் மாறி மாறி நின்று “ வால்டேர் ” வழக்காடுவதைக் காண முடியும். ஜி.நாகராஜன் பொன்மொழிகளைக் கேலி செய்யும் பாவனையில் எழுதிய ஒரு பத்தியில் உள்ளதுதான்... “ மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால்    மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்றுதான் சொல்வேன் ” என்பது. இப்போது அது ஒரு “பொன் மொழியாகவே ” மாறி தீவிர புழக்கத்தில் இருக்கிறது.   எனக்கு பொன்மொழிகளின் மீது ஈர்ப்பு உண்டு. “அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக்கல்லையும் உடைத்துவிடும் ” என்கிற பழமொழி படித்த கணத்திலிருந்து இன்று வரை என்னைத் தொடர்கிறது. ஆயினும் பொன்மொழிகளின் குணமும், கவிதையின் குணமும் ஒன்றல்ல. எனவே இக்கட்டுரை “பொன்னால் ஆன சொற்களை ” பேசுகிறது. கூடவே பொன்மொழியின் இயல்பான “பலர் வாய்ப்படுதல் ” என்கிற தன்மையையும் கணக்கில் கொள்கிறது.   இரண்டாயிரம் வருடங்களைத் தாண்டிய தொடர்ச்ச