Skip to main content

வார்த்தையில் வாழ்தல்


                     





    மனிதஇனத்தின் வாயிலும், எழுத்திலும் தொடர்ந்து பயின்று வரும் வரிகள் “ பொன் மொழிகள் “ ஆகி விடுகின்றன. பழமொழிகளும் இவற்றில் அடங்கும். இரண்டு எழுத்தாளர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது  இருவரின் சார்பிலும் மாறி மாறி நின்று “ வால்டேர்வழக்காடுவதைக் காண முடியும். ஜி.நாகராஜன் பொன்மொழிகளைக் கேலி செய்யும் பாவனையில் எழுதிய ஒரு பத்தியில் உள்ளதுதான்...மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால்   மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்றுதான் சொல்வேன் என்பது. இப்போது அது ஒரு “பொன் மொழியாகவேமாறி தீவிர புழக்கத்தில் இருக்கிறது.

  எனக்கு பொன்மொழிகளின் மீது ஈர்ப்பு உண்டு. “அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக்கல்லையும் உடைத்துவிடும்என்கிற பழமொழி படித்த கணத்திலிருந்து இன்று வரை என்னைத் தொடர்கிறது. ஆயினும் பொன்மொழிகளின் குணமும், கவிதையின் குணமும் ஒன்றல்ல. எனவே இக்கட்டுரை “பொன்னால் ஆன சொற்களைபேசுகிறது. கூடவே பொன்மொழியின் இயல்பான “பலர் வாய்ப்படுதல்என்கிற தன்மையையும் கணக்கில் கொள்கிறது.

  இரண்டாயிரம் வருடங்களைத் தாண்டிய தொடர்ச்சியுள்ள நமது மொழியில் தகத்தகாயம் காட்டும் சொற்கள் ஏராளம். இந்த மூன்று பக்கத்தில் அவற்றை முழுவதும் சொல்ல இயலாது. எனவே சிலவற்றைப் பார்ப்போம்...

   “ அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
  எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
  இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
  வென்றெறி முரசின் வேந்தர் எம்
  குன்றும் கொண்டார் யாம் எந்தையு மிலமே.

   தன் தந்தையான பாரியையும், தமது நிலமான பறம்பு மலையையும் இழந்து தவிக்கும் பிரிவுத்துயரில் “பாரி மகளிர்பாடியது.. சிடுக்கற்ற எளிய ஐந்து வரிகள்.. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்என்கிற சொற்ச்சேர்க்கையிலேயே  ஏதோ ஒரு மாயம் இருக்கிறது போலும்? எல்லாப் பிரிவுகளுக்குமான ஏக்கத்தையும் தாங்கிக் கொண்டு இன்று வரை வாழ்வாங்கு வாழ்கிறது இக்கவிதை.

 கொடிது கொடிது வறுமை கொடிது
 அதனினும் கொடிது இளமையில் வறுமை
                          என்கிறாள் ஒளவை.

 முதல் வரியை “ பொன் மொழிஎன்றும், இரண்டாவது வரியை கவிதையின் பொன் மொழி “ என்றும் சொல்லலாம். வறுமையும், இளமையில் வறுமையும் ஒன்றல்ல என்று பிரித்துக் காட்டியதின் மூலம் எம் பாட்டி இதைக் கவிதையாக்கி விடுகிறாள்.மேல்நிலை வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்று தேறி, ஒரு ஷூ வாங்கித் தரவில்லை என்பதற்காக கல்லூரிப் படிப்பையே பாதியில் நிறுத்திக் கொண்ட ஒருவனை எனக்குத் தெரியும்.

   திருக்குறள் பள்ளித்தலத்திலிருந்து பேருந்துகளின் முகப்பு வரை நீக்கமற நிறைந்திருக்கிறது.  வாழ்க்கையில் ? என்று கேட்காதீர்கள். “ சொல்லுதல் யார்க்கும் எளியவாம்...என்று அய்யனே சொல்லி இருக்கிறார். “ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைஎன்று மங்களகரமாகத்தான் நாம் வாழ்க்கையை துவங்குகிறோம்.ஆனாலும் பாருங்கள், எவ்வளவு இழுத்துப் பிடித்தும் நிற்காமல்  “வண்டி ரோட்டோர புளியமரத்தை நோக்கியே ஓயாமல் பாய்கிறது. குறளில் பொன்னால் ஆனவை அதிகம். அவை மனிதருக்குத் தக்க மாறவும் செய்யும்.

  “ அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
  செல்வத்தைத் தேய்க்கும் படை “

என்பதை நாம் தொடர்ந்து நம்புவோம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
 என்பும் உரியர் பிறர்க்கு

என்கிற குறள் நமக்கு மனப்பாடம். ஆனால் அதன் அர்த்தத்தின் முன்தான் மானுடகுலம் மண்டையை சொரிந்தபடி நிற்கிறது.
 
  கம்பனின் பாடல் ஒன்று... அசோகவனத்தில் சீதையை கண்டதைப் பற்றி அனுமன் இராமனுக்குச் சொல்லும் பாடல். பட்டிமன்றங்களில் கூறு போட்டு வித்தும் இன்னும் மிச்சமிருப்பது. எத்தனை நாவில் புரண்டெழுந்தாலும் அழுக்கடையாதது ...

 கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்
 தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்னகர் ;
 அண்டர் நாயக! இனித் துறத்தி ஐயமும்
 பண்டுள துயரும், என்று அனுமன் பன்னுவான்.

  உண்மையில் இப்பாடலை  முதன்முதலாக ஒரு பட்டிமன்றத்தில்தான் கேட்டேன். கண்டென் / கற்பினுக்கு அணியை / கண்களால் / என்று ஒவ்வொரு வார்த்தையும் நிரல்பட நிற்கும் கோலத்தைப் பற்றி பேச்சாளர் உருகி உருகிப் பேசினார். சீதையை என்று தொடங்கினால் அடுத்த வார்த்தை காணவில்லை என்று கூட வரலாம் அல்லவா ?அந்த ஒரு நொடி மயக்கமும், அது தரும் வேதனையும் கூட தன் தலைவனுக்குத் தகாது என்று எண்ணித்தான் “ கண்டனென்என்று துவங்குகிறானாம் அனுமன். சரி .. கண்டது சீதையை என்றும் சொல்லவில்லை... “கற்பினுக்கு அணியை “ என்கிறான். சீதையை என்று மட்டும் சொன்னால் அவள் கற்பு நிலை குறித்த ஐயம் வருமாம்.. இப்படி விளக்கிக் கொண்டே போனார்.. எனக்கு நம்பும் முன்னே அழுகை பொத்துக் கொண்டது. அழுத பிறகு சந்தேகம் கொள்ளுதல் தகாது.

கம்ப ராமாயணம் என்.சி.பி.எச் பதிப்பு இப்படி சொல்கிறது....

  ‘ கண்டனென் என்ற சொல், ‘த்ருஷ்டா ஸீதா‘ என்ற முதல் நூல் தொடரைத் தழுவியது. ஆனால், அடுத்துள்ள கற்பினுக்கு அணியை என்ற தொடர், ஸீதா என்கிற சொல்லைக் காட்டிலும் ஆழ்ந்த, சிறந்த, நுணுக்கமான பொருளை உடையதாகும் “

  “ கண்களால் “ என்கிற சொல் அமைப்பிற்கு இவ்வுரை தருகிற விளக்கம் ஏற்கவே முடியாதபடி இருக்கிறது. இப்படி இன்னும் பலப்பலவாக இப்பாடலை விரித்து விரித்து விதந்தோதுவர் கம்பனடிப் பொடிகள்.

  இன்று எங்கெங்கு காணினும் பாரதி. பாரதி சிட் பண்ட்ஸிலிருந்து பாரதி பரோட்டா ஸ்டால் வரை நான் பார்த்திருக்கிறேன். வெள்ளித்திரையிலிருந்து ஆட்டோ முதுகு வரை அவன் ஆட்சி நடக்கிறது. இன்று பாரதியின்றி ஒரு நாளைக் கூட தங்களால் கடக்க முடியாது என்பது போல் பாவனை காட்டும் தழிழ்ச்சமூகத்தால், அன்று அவனை காப்பாற்றி வைக்க இயலவில்லை. “ அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு என்கிற அவன் வரியையும், அவன் வாழ்வையும் சேர்த்துவைத்து யோசிக்கையில் அவ்வளவு கசக்கிறது.

. பாரதியின் புகழ்பெற்ற வரிகள் பலவும் விநாயகர் நான்மணிமாலைஎன்கிற வழிபாட்டுப் பாடலொன்றில் வருகிறது..

  “ நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
    இமைப்பொழுதும் சோராதிருத்தல் – உமைக்கு இனிய
    மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்:
    சிந்தையே ! இம்மூன்றும் செய்.

   உப்பு, புளி, மிளகாய் போன்ற அற்பப் பிரச்சனைகளை கணநாதன் பார்த்துக் கொள்வான். நீ வீட்டை விடுத்து நாட்டைப் பற்று மனமே என்கிறான்.
 “  உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் என்கிற வரியோடு சேர்த்து கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் “ என்றெழுத நெஞ்சத்தில் நேர்மையும் துணிவும் வேண்டும்.

      அவனது  இன்னொரு கவிதை ...

                 விடுதலைப் பாட்டு

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையாய் நெற்கள்புற்கள் மலிந்திருக்கும் அன்றே?
யான் எதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என் மதத்தைக் கைக்கொள்மின்: பாடுபடல் வேண்டா:
 ஊன்உடலை வருத்தாதீர்: உணவு இயற்கை கொடுக்கும்:
 உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் !

   பிரமிள் என்கிற பெயரோடு சேர்த்தே உச்சரிக்கப்படுவது அவரது காவியம் “ என்கிற கவிதை. ஆனாலும் “எல்லை என்கிற கவிதை எதற்கும் குறைந்ததல்ல..

கருகித்தான் விறகு/ தீயாகும்
அதிராத தந்தி/ இசைக்குமா?
ஆனாலும்/ அதிர்கிற தந்தியில்/ தூசு குந்தாது
கொசு/ நெருப்பில் மொய்க்காது

  ஒரு காலத்தில் எனக்கு சிடுக்கானவராக இருந்த ஆத்மாநாம் இன்று எளிய கவிஞராகி விட்டார். அதாவது “ இந்தக்காலம்அவரது ஒவ்வொரு சொற்களையும் தெளிவாக விளக்கி விடுகிறது.

          ஏதாவது செய்

ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப் படுகிறான்.
உன் சகோதரி
நடுத்தெருவில கற்பிழக்கிறாள்
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத் தவறினால்
உன் மனம் உன்னை சும்மா விடாது...
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்சவாயர்கள் மீது
எரிந்து விழச்செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத் தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.
                       
  பொன்னாலான மேலும் இரு கவிதைகள்..
                    
           சுண்டல்

         கொலு வைக்கும் வீடுகளில்
         ஒரு குத்துச் சுண்டல்
         அதிகம் கிடைக்கும் என்று
          தங்கச்சி பாப்பாக்களை
           தூக்க முடியாமல்
         தூக்கி வரும்
         அக்கா குழந்தைகள். 

                                   ( கலாப்ரியா)

  ஒரு காட்சியை, கடைசியில் இடம் பெறும் ஒரே ஒரு சொல்லால் கவிதையாக்கி நிலைநிறுத்தியும் விட்டது இக்கவிதை.

                      கையில் அள்ளிய நீர்

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?
                             ( சுகுமாரன் )

 காலப் பெருவெள்ளத்தில் துளியாய் மிஞ்சும் தனிமனிதனின் அகங்காரத்தை நோக்கி பல்லாண்டுகளாய் பேசி வருகிறது இக்கவிதை.

மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்று..
   
              குட்டி இளவரசியன் அறிதல்கள்

காலம் என்கிறீர்கள்
அகாலம் என்கிறீர்கள்
காலத்தை வெல்வதென்றும்
காலத்தைக் கடப்பதென்றும்
பயங்கரக் கதைகள் சொல்கிறீர்கள்
குட்டி இளவரசி சஹானா
“ நாளைக்கு மழை பெய்தது “
  என்கிறாள் அமைதியாக.

அமைதியாக என்ன பேச்சு பேசிவிட்டாள் !

      ஷங்கர்ராம சுப்பிரமணியனின் “ சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்”  பலர் வாய்ப் பட்ட“ கவிதை. சென்ற வாரம் கூட  தோல்வியுற்ற பாடகனொருவன்  மனம் கசந்து, முகம் மலர்ந்து இக்கவிதையைச் சொல்லக் கேட்டேன். நான் இக்கவிதையின் குழந்தை.     
         
          சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்

ஒரு வேலைக்கும் பொருத்தமற்றவர் என
உங்கள் மேல் புகார்கள் அதிகரிக்க/ அதிகரிக்க
உங்கள் அன்றாட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு
உங்களுக்கு ஒரு எளிய பணி வழங்கப்படுகிறது.
ஊரின் புறவழிச் சாலையில் உள்ள
மிருகக் காட்சி சாலையின் சிங்கத்துக்கு
பல்துலக்கும் வேலை அது
காவல் காப்பவனும் நீங்களும்
கூண்டில் அலையும் பட்சிகளும் மிருகங்களும்
உங்கள் மனஉலகில்
ஒரு கவித்துவத்தை எழுப்புகின்றன
அதிகாலையில் பிரத்யேக பேஸ்ட்டை பிரஷில் பிதுக்கி
உங்கள் பணியிடத்திற்கு ஆட்வத்தோடு கிளம்புகிறீர்கள்
அதிகாலை
மான்கள் உலவும் புல்வெளி
உங்கள் கவித்துவத்தை மீண்டும் சீண்டுகிறது
முதலில் கடமை
பின்பே மற்றதெல்லாம் எனச்சொல்லிக் கொள்கிறீர்கள்
கூண்டை மெதுவாய்த் திறந்து மூலையில்
விட்டேத்தியாய் படுத்திருக்கும் சிங்கத்திடம்
உங்களுக்கு பணி செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளேன்
நீங்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று
விவரத்தை கூறி பிரஷை காட்டுகிறீர்கள்
ஒரு கொட்டாவியை அலட்சியமாக விட்டு
வாயை இறுக்க மூடிக் கொள்கிறது சிங்கம்
ஸபரிசம் தேவைப்படலாம் என ஊகித்து
தாடையின் மேல்புறம் கையைக் கொண்டு போகிறீர்கள்
சிங்கம் உறுமத் தொடங்கியது
கையில் உள்ள பிரஷ் நடுங்க
உங்களுக்கு பிரஷ் செய்வது
என் அன்றாட வேலை
அது எனக்கு சம்பளம் தரக்கூடியது
எவ்வளவு நாற்றம் பாருங்கள்
உங்கள் பற்களின் துர்நாற்றம் அது
சிறிது நேரம் ஒத்துழையுங்கள்
மீண்டும் சிங்கம் உறுமுகின்றது
அது பசியின் உறுமலாகவும் இருக்கலாம்
நீங்கள் மூலையில் சென்று அமர்கிறீர்கள்
காலையின் நம்பிக்கையெல்லாம் வற்றிப் போக
பக்கத்து கூண்டுப் பறவைகளிடம்
வழக்கம் போல
பணி குறித்த முதல் புகாரைச் சொல்லத் தொடங்குகிறீர்கள்
எனது வேலையை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறது சிங்கம்
பறவைகள் ஈ...ஈ...எனப்
புரிந்தும் புரியாமலும் இளித்தன.
கூண்டைச் சுற்றி மரங்கள்
படரத் தொடங்கும் வெயில்
வாயில் காப்போன் உங்களைப் பார்வையிட
தூரத்தில் வந்து கொண்டிருக்கிறான்.
   
    மின்னலைத் தொழுகின்றோம். அது நம்மறிவை ஒளியுறச் செய்க ! நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக ! நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க ! நமது பாட்டு மின்னலுடைத்தாகுக !
                                     நன்றி : அந்திமழை - மே-2017

        

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான